Saturday, March 30, 2013

4.53. எழுவகைத் தளைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.53. எழுவகைத் தளைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீர்முன் சீர்வர எழுந்திடும் தளைகள்
சீர்வகை சார்ந்து ஏழு வகைகளில்
எழுவது அறிதல் எளிதில் ஆகுமே.

சீர்களின் வகைகள் மூன்றினில் அமையும்
ஈரசை பயிலும் இயற்சீர் ஒருவகை
மூவசை பயிலும் காய்ச்சீர் ஒருவகை
மூவசை பயிலும் கனிச்சீர் ஒருவகை.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கு
மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டு.

இயற்சீர் நான்கும் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
கலிப்பா வுக்கென்று தனிச்சீர் இலையெனில்
கலிப்பா வுக்கோர் தனித்தளை யுண்டு.

நின்றசீர் வரும்சீர் ஒன்றிட வரும்தளை
நான்கு வகைகளில் அமைந்து வருமே
மூன்றினில் அமையுமே ஒன்றாத தளைவகை.

ஒன்றும் தளைகள் நால்வகைப் பெயர்களில்:
நேரொன்று நிரையொன்று ஆசிரி யத்தளை
வெண்சீர் வெண்டளை ஒன்றிய வஞ்சித்தளை.
ஒன்றாத் தளைகள் மூவகைப் பெயர்களில்:
இயற்சீர் வெண்டளை கலித்தளை மற்றும்
ஓன்றாத வஞ்சித்தளை என்பன அவையே.

ஈரசைச் சீர்நின்று இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் நேரொன் றாசிரியம்
நிரையசை யொன்றுதல் நிரை யொன்றாசிரியம்.
நேர்நிரை யொன்றாமை இயற்சீர் வெண்டளை.

மூவசை பயிலும் சீர்வகை எட்டில்
காய்சீர் நின்று இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் வெண்சீர் வெண்டளை
நிரையசை யொன்றாமை கலித்தளை யாகுமே.

கனிச்சீர் நின்று இனிவரும் சீரோடு
நிரையசை யொன்றுதல் ஒன்றிய வஞ்சித்தளை
நேரசை யொன்றாமை ஒன்றாத வஞ்சியே.

தளைகளின் பெயர்களை நோக்கிடும் போது
ஆசிரியப் பாவிற்குத் தளைகள் இரண்டும்
வெண்பா விற்குத் தளைகள் இரண்டும்
கலிப்பா விற்குத் தளையென ஒன்றும்
வஞ்சிப் பாவிற்குத் தளைகள் இரண்டும்
என்றே எழுவகை பிரிவது காண்போம்.

நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
ஆயிரு தளைகள் ஆசிரியப் பாவிற்கும்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
ஆயிரு தளைகள் வெண்பா விற்கும்
கலித்தளை யொன்றே கலிப்பா விற்கும்
ஒன்றிய வஞ்சி ஒன்றாத வஞ்சி
ஆயிரு தளைகள் வஞ்சிப்பா விற்கும்
உரிய தளையென அறியப் படுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
நின்றசீர் வரும்சீர் ஒரேவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்புடைத் தளைகளாம்
நின்றசீர் வரும்சீர் வேறுவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்பில்லாத் தளைகளாம்
அதாவது
இயற்சீரோ காய்ச்சீரோ அன்றிக் கனிச்சீரோ
நின்றதும் வருவதும் அதுவே ஆயின்
வந்திடும் தளைகள் சிறப்புடை யனவாம்
சீர்களின் வகைகள் கலந்து வருவது
சிறப்பில்லாத் தளைகள் என்பதை அறிவோம்.

*****

Tuesday, March 26, 2013

4.50. தளை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.50. தளை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைதல் என்றால் பிணித்தல் கட்டுதல்
தளைத்தல் எனினும் அதுவே யாகும்
தளையெனும் சொல்லில் விளையும் பொருள்கள்
கட்டு கயிறு விலங்கு சிலம்பென
ஒட்டிப் பிணைத்து இசைந்திட வைக்குமே.

பூக்களை நாரினால் கட்டித் தளைக்கப்
பூச்சரம் ஒன்றுரு வாவது போலே
சீர்களைச் செய்யுளில் இசைவரத் தளைக்க
சீர்களின் தொடரென அடியுரு வாகுமே.

4.51. தளையென்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீரொடு சீர்சேர்த் தியற்றும் அடியிலே
சீர்களின் இடைநின் றவற்றைப் பிணித்திடும்
செய்யுளின் உறுப்பு தளையெனப் படுமே.

சீர்கள் இரண்டு சேரும் போது
முதலில் நிற்பது நின்றசீர் ஆகும்
எதிரில் வருவது வரும்சீர் ஆகுமே.

இடமிருந்து வலமெழுதும் இன்றமிழ்ச் செய்யுளில்
இடப்புறம் நிற்பது நின்றசீர் ஆகும்
வலப்புறம் வருவது வரும்சீர் ஆகுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
சீர்கள் இரண்டு தளைப்பது காண
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே.
எனவே
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றியோ ஒன்றாதோ கூடி நிற்பது
தளையெனும் உறுப்பின் இலக்கண மாகுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகள் பெரிதும் சீரிடை வரினும்
அடிகளுக் கிடையிலும் தளைகள் வருவன
அடியிடைத் தளைகள் வருவது காண
நின்ற அடியின் ஈற்றுச்சீர் ஈற்றசையும்
வருகிற அடியின் முதற்சீர் முதலசையும்
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே.

4.52. தளை வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும்
வருவது ஒன்றிய தளையெனப் படுமே
நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும்
மாறி வருவது ஒன்றாத் தளையாம்.

தன்சீர் தனதொடு ஒன்றலும் உறழ்தலும்
என்றிரண் டாகும் இயம்பின தளையே.
---இலக்கண விளக்கம், 717

நேர்முன் நேர்வர ஒன்றுதல்:
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
ஒன்றும் ஒன்றாத் தளைகள் குறிப்பில்
நின்ற சீரே சீர்ப்பெயர் தாங்கும்
எதிர்வரும் சீரின் முதலசை பெயர்பெறும்.

தனிச்சொல்
ஏனெனில் 

நேர்முன் நேரசை ஒன்றிடும் போது
நின்ற சீரது இயற்சீ ராகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது தேமா புளிமா வாகுமே

தனிச்சொல்
அல்லது

நின்ற சீரது மூவசை யாகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது நான்கில் ஒருகாய்ச் சீராம்
வருவது யாதொரு சீரென் றாயினும்
வரும்சீர் முதலசை நேரசை யாகும்

தனிச்சொல்
இதனால்

நேர்முன் நேரசை ஒன்றுதல் குறிக்க
மாமுன் நேரென, காய்முன் நேரென
நின்றசீர் வருமசை நோக்கிக் குறிப்பரே.

நிரைமுன் நிரைவர ஒன்றுதல்:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இயற்சீர் முன்நிரை யொன்றும் போது
நின்ற சீரது விளச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
விளம்முன் நிரைவர ஒன்றுத லென்பரே
நின்ற சீரது கனிச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
கனிமுன் நிரைவர ஒன்றுத லென்பரே.

நேர்நிரை முன்வர ஒன்றாமை:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேர்முன் நிரைவரும் ஒன்றாமை குறிக்க
மாமுன்நிரை காய்முன்நிரை யெனும்வாய் பாடும்
நிரைமுன் நேர்வரும் ஒன்றாமை குறிக்க
விளம்முன்நேர் கனிமுன்நேர் யெனும்வாய் பாடும்
தளைகள் அறிய மிகவும் பயன்படும்.
தளைவாய் பாடில் ’முன்’எனும் சொல்லுக்கு
எதிர்வரும் என்று பொருள்கொளல் வேண்டுமே.

*****

Wednesday, March 20, 2013

4.46. நாலசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.46. நாலசைச் சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியில்
நேரசை நிரையசை சேர்ந்து வந்திடும்
நாலசைச் சீர்கள் பதினா றாகுமே.

நாலசைச் சீர்கள் பதினா றில்வரும்
தண்பூ நான்கு நறும்பூ நான்கு
தண்ணிழல் நான்கு நறுநிழல் நான்கு.

நாலசைச் சீர்கள் அமைவது அறிய
ஈரசைச் சீர்கள் எட்டின் பின்னே
தண்பூ நறும்பூ தண்ணிழல் நறுநிழல்
குறிகள் சேர்ந்து வருவது புலப்படும்.

நேரில் முடியும் எட்டு சீர்களும்
பூச்சீர் என்று அழைக்கப் படுவது.
நிரையில் முடியும் மீதம் எட்டும்
நிழற்சீர் என்று அழைக்கப் படுவது.
நான்கசைச் சீர்கள் அருகியே வருமாம்.

(ஆசிரியத் தாழிசை)
’தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ கருவிளந்தண்பூ கூவிளந்தண்பூ’
’தேமாநறும்பூ புளிமாநறும்பூ கருவிளநறும்பூ கூவிளநறும்பூ’
என்பன பூச்சீர் வாய்பா டாகும்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர்நேர் நிரைநேர்நேர்நேர் நிரைநிரைநேர்நேர் நேர்நிரைநேர்நேர்
நேர்நேர்நிரைநேர் நிரைநேர்நிரைநேர் நிரைநிரைநிரைநேர் நேர்நிரைநிரைநேர்
என்னும் எட்டு பூச்சீர் வகைகளே.

(ஆசிரியத் தாழிசை)
’தேமாந்தண்ணிழல் புளிமாந்தண்ணிழல் கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்’,
’தேமாநறுநிழல் புளிமாநறுநிழல் கருவிளநறுநிழல் கூவிளநறுநிழல்’
என்பன நிழற்சீர் வாய்ப்பா டாகும்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர்நிரை நிரைநேர்நேர்நிரை நிரைநிரைநேர்நிரை நேர்நிரைநேர்நிரை
நேர்நேர்நிரைநிரை நிரைநேர்நிரைநிரை நிரைநிரைநிரைநிரை நேர்நிரைநிரைநிரை
என்னும் எட்டு நிழற்சீர் வகைகளே.

வெண்பா ஒழிந்த பிறபாக் களிலே
பொதுப்பட வந்து நிற்பத னாலே
பொதுச்சீர் என்று நாலசை பெயர்பெறும்.

பொதுவெனும் சொல்லிங்கு பொதுமக்கள் என்பதில்போல்
சிறப்பற்ற சாதாரணம் என்றே பொருள்படும்
இதனால் நாலசைச் சீர்கள் செய்யுளில்
பொதுவென் பதனால் அருகியே வருமே.

நாலசைச் சீர்களை அலகிடும் போது
பூச்சீர் களெட்டும் காய்ச்சீர் எனவும்
நிழற்சீர் களெட்டும் கனிச்சீர் எனவும் 
கொண் ல கிட்டுத் தளைகாண வேண்டுமே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சான்றாக ’வடிவார்கூந்தல் மங்கையரும்’ என்பது
போன்ற தொடர்களை அலகிடும் போது
வடி/வார்/கூந்/தல் மங்/கைய/ரும்
புளிமாந்தண்பூ கூவிளங்காய் என்றுவரும் சீர்களை
புளிமாங்காய் கூவிளங்காய் என்றே கொண்டு
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை
என்றே தளைதனைக் காணுதல் வேண்டுமே.

(கலித்தாழிசை)
’அங்கண்வானத் தமரரசரும்’ அலகிட 
அங்/கண்/வா/னத் தம/ரர/சரும் என்று
தேமாந்தண்பூ கருவிளங்கனி யாகித்
தேமாங்காய் கருவிளங்கனி என்றே கருதக்
காய்முன் நிரைவரும் கலித்தளை பயிலுமே.

’வெங்கண்வினைப்பகை விளிவெய்த’ அலகிட
வெங்/கண்/வினைப்/பகை விளி/வெய்/த
தேமாநறுநிழல் புளிமாங்காய் என்னும் சீர்களைத்
தேமாங்கனி புளிமாங்காய் என்றே கருதக்
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித் தளையாகும்.

’அந்தரதுந்துபி நின்றியம்ப’ அலகிட
அந்/தர/துந்/துபி நின்/றியம்/ப
கூவிளந்தண்நிழல் கூவிளங்காய் என்னும் சீர்களைக்
கூவிளங்கனி கூவிளங்காய் என்றே கருதக்
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித் தளையாகும்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சிப் பாவினில் பொதுச்சீர் வரலாம்
வெண்பா தன்னில் வருதல் ஆகாது
குற்றுகரம் வந்தால் ஒழியப் பொதுச்சீர்
அகவல் கலியெனும் பாக்களில் வராதே.

பூச்சீர் நிழற்சீர் நாமைத்த சொற்றொடர்கள்:
(கலிவிருத்தம்)
வாவாவென்று வருவாயென்று தெரிவதுகாண்பாய் கண்டதுகாண்பாய்
வாவாவெனச்சொல் வருவாயெனச்சொல் தெரிவதென்றுசொல்வாய் கண்டதுகொடுப்பாய்
வாவாவந்துபார் வருவாய்வந்துபார் தெரிவதுவந்துபார் கண்டதுவந்துபார்
பூவாய்வருவது வருவாய்வருவது தெரிவதுவருவது கண்டதுவருவது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இப்படிச் சொற்களை முயன்றமைத் தாலும்
இவைபோல் வந்திடும் சொற்கள் பிரிந்திட
நாலசை அமைவது அரிதெனப் புரியுமே.

*****

Friday, March 1, 2013

4.45. மூவசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.45. மூவசைச் சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஈரசைச் சீர்கள் நான்கின் இறுதியில்
நேரசை நிரையசை சேர்ந்து வந்து
மூவசைச் சீர்கள் எட்டா கிடுமே.

ஈரசை இறுதியில் நேரசை சேர்ந்துவரும்
மூவசைச் சீர்கள் நான்கும் காய்ச்சீர்
ஈரசை இறுதியில் நிரையசை சேர்ந்துவரும்
மூவசைச் சீர்கள் நான்கும் கனிச்சீர்.

’தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்’
என்பது காய்ச்சீர் வாய்பா டாகும்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
என்னும் நால்வகை காய்ச்சீர் வகைகளே.

’தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி’
என்பது கனிச்சீர் வாய்பா டாகும்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
என்னும் நால்வகை கனிச்சீர் வகைகளே.

வெண்பாவுக் குரியதால் காய்ச்சீர் நான்கும் 
வெண்சீர் வெண்பா வுரிச்சீர் என்று
இரண்டு பெயர்கள் பெற்று வருமே.

வஞ்சிப்பா வில்வரும் கனிச்ச்சீர் நான்கும்
வஞ்சிச்சீர் வஞ்சி யுரிச்சீர் என்று
இரண்டு பெயர்கள் பெற்று வருமே.

தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு
பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க.

பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
[சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை]
--பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.49

காய்கனிச் சீர்களுக்கு இன்றைய வழக்கில்
டீவீபார் சினிமாபார் நகைக்கடைபார் சீரியல்பார்
ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடமும்படி
போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம்.

(குறள் வெண்பா)
காய்ச்சீராம் வெண்பா வுரிச்சீர் களேவரும்
கீழ்வரும் வெண்பா விலே.

(இன்னிசை அளவியல் வெண்பா)
ஆராரோ ஆரிரரோ கண்ணேநீ கண்ணுறங்கு
ஆராரோ பேசினாலும் உன்கண்ணை மூடிவைத்து
நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
நானோய்ந்து தூங்குமுன்நீ தூங்கு.

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் காசு

கனிச்சீராம் வஞ்சியுரிச் சீர்களே வருகிற
சான்று கீழ்வரும் வஞ்சி அடிகளில்.

(குறளடி வஞ்சிப்பாவின் பகுதி)
பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவியலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மண்முரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
--யா.கா.மேற்கோள்

தேமாங்கனி கூவிளங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி
கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்கனி புளிமாங்கனி

*****

4.45. மூவசைச் சீர் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

4.44. ஈரசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.44. ஈரசைச் சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்காம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசைச் சீர்கள் இப்படி நான்கே.

ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு விளச்சீர் இரண்டு.
ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்பது ஈரசைச் சீர்களின் வாய்பாடு.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்னும் நான்கு ஈரசைச் சீர்களே
சீரின் அசைநிரல் பெயரே சுட்டுமே.

அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர்.
---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’

தேமா என்பது பழுக்கும் மாங்காய்
புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
கருவிளம் என்பது விளாமர மாகும்
கூவிளம் என்பது வில்வ மரமே.

அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்கள் பெயர்பெறும்.
செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
இயற்சீர் என்ற பெயரில் வருமே.

அகவல் ஓசை தாங்கி வருவதால்
அகவற் சீரெனும் பெயரில் வருமே.
அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரென் றாகும் இதுவே
ஆசிரிய வுரிச்சீர் என்றும் பெயர்பெறும்.

இயற்சீர் மட்டுமே அமைந்த குறளிது:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

இந்தக் குறளை அலகிட வருவது
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
புளிமா புளிமா மலர்-என அறிக.

4.44. ஈரசைச் சீர் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****