Saturday, June 22, 2013

4.67. கழிநெடிலடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.67. கழிநெடிலடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆறும் அதற்கு மேற்படும் சீர்கள்
அமைந்து முடிவது கழிநெடி லடியாம்.
கழிநெடி லடிகளை நீளம் நோக்கிப்
பலவரி களிலே எழுதுதல் வழக்கமே.

சீர்கள் மிகுவதால் சரியாய் அளவிட
அடியெது கையினை அமைப்பது வழக்கம்.
அடியெது கையினில் ஒவ்வோர் அடியிலும்
முதலாம் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றி வருமே.

அடிகள் தோறும் சீர்களின் நடுவில் 
முதலெழுத் தொன்றும் மோனை யமைத்தால்
செய்யுளின் ஓசை சீர்த்து வருமே.

சான்று 1. அறுசீர்க் கழிநெடிலடி
(அடியெதுகை, சீர் மோனை 1-4)

நீரிடை உறங்கும் சங்கம் 
... நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு 
...தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை 
...துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் 
...பொழிலிடை உறங்கும் தோகை.
--கம்பராமாயணம் 1.2.6.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
...
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
--மஹாகவி பாரதியார், தமிழ்

சான்று 2. எழுசீர்க் கழிநெடிலடி

சீரணி திகழ்திரு மார்பின் வெண்ணூலார் 
. திரிபுரம் எரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையொர் பங்கர்
. மான்மறி ஏந்திய மைந்தர்
--திருஞானசம்பந்தர், திருப்பாம்புரம் தேவாரத் திருப்பதிகம்

சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள் 
மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போதிலும்
--மஹாகவி பாரதியார், ஜய பாரத!

சான்று 3. எண்சீர்க் கழிநெடிலடி

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
. வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
--உலகநாதர், உலகநீதி

மங்கியதோர் நிலவினிலே கனவவிலிது கண்டேன்
. வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
. புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
--மஹாகவி பாரதியார், அழகுத் தெய்வம்

சான்று 4. ஒன்பதின் சீரடி விருத்தம்

இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் 
. எதிர்ந்த தானையை இலங்கும் ஆழியின் விலங்கியோன் 
முடங்கு வாலுளை மடங்கல் மீமிசை 
. முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோன்
--யாப்பருங்கலக் காரிகை

இடியது விழுந்த தோதான்
. இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி
. . இருசெவி நுழைத்த தோதான்
தடியது கொண்டே எங்கள்
. தலையினில் அடித்த தோதான்
. . தைரியம் பிறந்த தோதான்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, திலகர்

சான்று 5. பதின் சீரடி விருத்தம்

கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு 
 கூடி நீடும் ஓடை நெற்றி 
வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத 
 நாத என்று நின்று தாழ
--யாப்பருங்கலம்

கைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி
 கட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்
முத்தலைப்ப டைக்க ரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கும்
 முக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ
--குமரகுருபரர், சிதம்பர செய்யுட்கோவை 56

சான்று 6. பதினொரு சீரடி விருத்தம்

அருளாழி ஒன்றும் அறனோர் இரண்டும் 
. அவிர்சோதி மூன்றொ டணியொரு நான்கும் 
. . மதமைந்தும் ஆறு பொருண்மேல் 
மருளாழி போழும் நயமேழும் மேவி 
 . நலமெட்டும் பாடும் வகையொன்ப தொன்ற 
. . வரதற்கோ பத்தின் மகிழ
--யாப்பருங்கலம்

வீடு கொண்ட நல்லறம் பகர்ந்த மன்ப தைக்கெல்லாம்
. விளங்கு திங்க ணீர்மையால் விரிந்திலங்கும் வன்பினோன்
மோடு கொண்ட வெண்ணு ரைக்க ருங்கடற் செழுஞ்சுடர்
. முளைத் தெழுந்த தென்னவாய் முகிழ்த்திலங்கு போதியின்
--புத்தமித்திரனார், வீரசோழியம்

சான்று 7. பன்னிரு சீரடி விருத்தம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எண்சீர் விருத்தம் மேற்பட இன்று
எழுதப் படுகிற விருத்தம் பொதுவில்
பன்னிரு பதினான்கு பதினாறு வகையே.
பதினொரு சீரின் மேற்படும் அடிகளைப்
இரட்டை விருத்தம் என்று சொல்வரே. ... [வீரசோழிய உரை]

கருணையின் முழுகிய கயறிரி பசியக ரும்பே வெண்சோதிக்
. கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர் கன்றே யென்றோதும்

திருமகள் கலைகமக டலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை
. தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில் செங்கோ செங்கீரை.
--குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மைப் பிள்லைத் தமிழ் 9

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே
. வான மளந்த தனைத்து மளந்திடும் வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே
. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே.
--மஹாகவி பாரதியார், தமிழ்மொழி வாழ்த்து

சான்று 8. பதினான்கு சீரடி விருத்தம்

எய்த வம்பு தைக்கு முன்ன மற்றொர் பகழி தொட்டுவேள்
. ஏழை யங்க நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான்
செய்த வம்பு ரிந்தி லாதெ னுய்யு மாறு முண்டுகொல்
. திகழு மாட மதியு ரிஞ்சு கச்சி மேய செம்மலார்
--பூண்டி அரங்கநாத முதலியார், கச்சிக்கலம்பகம் 76

தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! 
...தரணி யெங்கும் இணையி லாத சரிதை கொண்டு செல்லடா! 
அமிழ்த மென்ற தமிழி னோசை அண்ட முட்ட உலகெலாம் 
...அகில தேச மக்க ளுங்கண் டாசை கொள்ளச் செய்துமேல்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, 20. இளந்தமிழனுக்கு

சான்று 9. பதினாறு சீரடி விருத்தம்

ஓங்குகயி லாயபரம் பரைநந்தி யடிகட் 
. குறுமரபெட் டாவதுபிற் றோன்றலா யெங்கள் 
. . உயர்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவற் 
. . . குற்றபத்தொன் பதாவதுமுற் றோன்றலாய்ப் பொலிந்து 
தேங்குசிவப் பிரகாச முதலியவாய் மலர்ந்து 
. திகழுமா பதிசிவனே குன்றையுற மேவித் 
. . திரிந்துமேர் வளங்கொண்டு பெருமையின்மே லாகித் 
. . . சிறத்தலாற் செம்மேனிக் குமரவே ளத்தும்
--தி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சேக்கிழார்ப் பிள்லைத்தமிழ் 723

சந்தவிருத்தம்

பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள் 
. பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்
. . பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள் 
. . . படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள் 
. எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்
. . இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள் 
. . . எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும்
--குமரகுருபரர், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 1.9

*****

Friday, June 21, 2013

4.66. நெடிலடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.66. நெடிலடி முயற்சி

(குறள் வெண்செந்துறை)
அடிகள் தோறும் ஐந்துசீரில் முடியும்
நெடிலடி இயற்ற நாமும் முயல்வோம்

அளவொத்த எவ்வகை அடியும் எத்தளையும் கொண்டு
அடிகள் இரண்டுவரும் குறள்வெண் செந்துறையில் முனைவோம்.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)

கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.

வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.

மூச்சினை அடக்கி யாண்டு எண்ணுவது ஒருமைப்பட்டு
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?

முயற்சி 2.
(கலித்துறை)
வந்ததும் இருப்பதும் தெரியும் வருவது தெரியுமோ?
நொந்ததும் நிகழ்ந்ததும் தெரியும் நாளையென் தெரியுமோ?
பந்தைய எலிகள் வாழ்வில் விந்தைகள் ஏதுமுண்டோ?
சிந்தனை தறிகெட் டோடும் சிறுமதிதான் சாதனையோ?

முயற்சி 3.
(கலித்துறை)
தென்றலின் அலையில் தலைசாயும் நெற்பயிர் வயல்கள்
கன்றுடன் பசுக்கள் தொழுவம் திரும்பிடும் மாலை
மேற்கினில் மறையும் கதிரவன் ஒளியின் கீற்றுகள்
காற்றிலே ஊடுருவிக் கண்களில் பட்டு வழியும்.

4.66. நெடிலடிப் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

Monday, June 10, 2013

4.66. நெடிலடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.66. நெடிலடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஐந்துசீர் கொண்டு முடிவது நெடிலடி
அளவடி விஞ்சும் சீர்கள் வருதலால்
நெடிலடி என்று பெயர்பெற் றிடுமே
நெடிலடி மற்றும் கழிநெடி லடிகள்
பாவினங் களிலே பெரிதும் வருமே.

சான்று 1.
(கலித்துறை)
வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினைநீங்கி நின்றார்
--தோலாமொழித் தேவர், சூளாமணி, கடவுள் வாழ்த்து

சான்று 2.
(கலித்துறை)
செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயி னோடும் 
சந்தார்தடந் தோளடும் தாழ்தடக் கைக ளோடும் 
அந்தாரக லத்தொடும் அஞ்சனக் குன்ற மென்ன 
வந்தானிவன் ஆகுமவ் வல்விலி ராம னென்றாள்.
--கம்பராமாயணம், 3.7.3215

சான்று 3.
(கலித்துறை)
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
--அருணகிரிநாதர், கந்தலரங்காரம் 72

*****

Thursday, June 6, 2013

4.65. அளவடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.65. அளவடி முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளவடி நாமும் முயன்றிடு வோமா?
அளவடி பயிலும் பாவகை அனைத்தும்
ஒருகை பார்ப்போம் சிறுகை யாயினும்!

ஆசிரியப்பா முயற்சி
அகவற் பாவொன்று தகவுடன் புனைய
குறைந்தது மூன்று அடிகள் தன்னில்
மாமுன் நேரும் விளமுன் நிரைவரும்
ஆசிரியத் தளைகள் சீரிடை அடியிடை
மாசற ஒன்றிப் பிறதளை விரவுமே!

உள்ளுவ தனைத்திலு முயர்ந்ததே உறைந்து
தள்ளுவ தனைத்தும் தள்ளி வாழ்ந்தால்
விள்ள லின்றி வாழ்க்கை நடக்குமே.

கூவிளம் கருவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் புளிமா தேமா தேமா
தேமா தேமா தேமா கருவிளம்

உள்/ளுவ(து) (நிஆ) அனைத்/திலு(ம்) (நிஆ) உயர்ந்/ததே (நிஆ) உறைந்/து (நேஆ)
தள்/ளுவ(து) (நிஆ) அனைத்/தும் (நேஆ) தள்/ளி (நேஆ) வாழ்ந்/தால் (நேஆ)
விள்/ள(ல்) (நேஆ) இன்/றி (நேஆ) வாழ்க்/கை (இவெ) நடக்/குமே.

வெண்பா முயற்சி
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்;
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை;
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

அடிகள் இரண்டில் குறள்வெண்பா மற்றும்
அடிகளில் நாலாம் அளவியல் வெண்பா
வடித்துத்தான் பார்ப்போமே நாம்.

குறள் வெண்பா முயற்சி
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ ஐயா!

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் தேமா

ஏற்ற வகைகளில் வெண்டளை வந்தாலும்
ஈற்றசையின் வாய்பாடு தப்பு.

திருத்தியது
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்.

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்

இன்னும் இயல்பாக
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்லு?

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்

எல்/லோ/ரும் (வெவெ) நல்/லவர் (இவெ) என்/றா/கிப் (வெவெ) போ/னா/லே (வெவெ) 
தொல்/லுல/கம் (வெவெ) தாங்/குமோ (இவெ) சொல்/லு.

இன்னிசை வெண்பா (அலகிட்டுத் தளைகளை அறிக)
நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலப் பல்வகையில் சேர்ந்துவந்து
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு.

நேரிசை வெண்பா (இப்படி எழுதுவது இன்னும் சிறப்பு)
நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலச் சேர்ந்துவந்து - பல்வகையில் 
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு.

கலிப்பா முயற்சி
(குறள் வெண்செந்துறை)
கலித்தளையே பெரிதுவரப் பிறதளைகள் விரவிவந்தால்
கலிப்பாவின் அடிகளாகி ஒலித்துள்ளல் பயின்றுவரும்.

(கலிவிருத்தம்)
நீலவானப் பெருவெளியில் கோலமிடும் நிறவகைகள்
மாலையிலே தொடுத்திட்ட மலர்கள்போல் பலநிறங்கள்
காலையிலே எழுந்ததுமே கண்ணிறைக்கும் சிவந்தவானில்
ஆலயமணி செவியினிலே மிதந்துவந்து அமைதிதரும்.

கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்கனி கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்

நீ/லவா/னப் (கத) பெரு/வெளி/யில் (வெவெ) கோ/லமி/டும் (கத) நிற/வகை/கள் (வெவெ) 
மா/லையி/லே (கத) தொடுத்/திட்/ட (கத) மலர்/கள்/போல் (கத) பல/நிறங்/கள் (வெவெ)
கா/லையி/லே (கத) எழுந்/தது/மே (வெவெ) கண்/ணிறைக்/கும் (கத) சிவந்/தவா/னில் (வெவெ) 
ஆ/லய/மணி (வறி) செவி/யினி/லே (கத) மிதந்/துவந்/து (கத) அமை/தித/ரும்.

4.65. அளவடிப் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

Monday, June 3, 2013

4.65. அளவடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.65. அளவடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாற்சீர் அமைந்து முடிவது அளவடி
நாற்சீர் அடியின் இயல்பு என்பதால் 
அளவடி யென்று அழைக்கப் பட்டது
நேரடி என்றும் இதனை அழைப்பரே.

பழந்தமிழ் இலக்கியப் பனுவல் பலவும்
அளவடி கொண்டே அமைந்து வருவன.
அகவல் வெண்பா கலிப்பா என்னும் ... ... ... [அகவற்பா=ஆசிரியப்பா]
மூவகைப் பாக்களில் அளவடி வருமே.

அளவடிச் சான்றுகள் எளிதில் காணலாம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ(டு) இணங்க வேண்டாம்.
--உலகநாதர், உலகநீதி

ஆசிரியப்பா சான்றுகள்
(நேரிசை ஆசிரியப்பா)
பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.
--கபிலர், புறநானூறு 107

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே யென்கோ
வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ
--சிலப்பதிகாரம், 1.2.73-79

தானமும் தருமமும் தவமும் தன்மைசேர் 
ஞானமும் நல்லவர்ப் பேணும் நன்மையும் 
மானவ வையம் நின்மகற்கு வைகலும்
ஈனமில் செல்வம் வந்தியைக என்னே
--கம்பராமாயணம் 2.1.80

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
--மஹாகவி பாரதியார்

வெண்பாச் சான்றுகள் (ஈற்றடி சிந்தடி)
(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
--திருக்குறள் 1

(நேரிசை வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

(இன்னிசை வெண்பா)
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்
--நாலடியார் 36

கலிப்பா சான்றுகள்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
--மாணிக்கவாசகர், திருவாசகம் 19

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே.
--இராமலிங்க அடிகள், ஆளுடைய அடிகள் அருள்மாலை 7

*****