கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4.67. கழிநெடிலடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆறும் அதற்கு மேற்படும் சீர்கள்
அமைந்து முடிவது கழிநெடி லடியாம்.
கழிநெடி லடிகளை நீளம் நோக்கிப்
பலவரி களிலே எழுதுதல் வழக்கமே.
சீர்கள் மிகுவதால் சரியாய் அளவிட
அடியெது கையினை அமைப்பது வழக்கம்.
அடியெது கையினில் ஒவ்வோர் அடியிலும்
முதலாம் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றி வருமே.
அடிகள் தோறும் சீர்களின் நடுவில்
முதலெழுத் தொன்றும் மோனை யமைத்தால்
செய்யுளின் ஓசை சீர்த்து வருமே.
சான்று 1. அறுசீர்க் கழிநெடிலடி
(அடியெதுகை, சீர் மோனை 1-4)
நீரிடை உறங்கும் சங்கம்
... நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு
...தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை
...துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்
...பொழிலிடை உறங்கும் தோகை.
--கம்பராமாயணம் 1.2.6.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
...
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
--மஹாகவி பாரதியார், தமிழ்
சான்று 2. எழுசீர்க் கழிநெடிலடி
சீரணி திகழ்திரு மார்பின் வெண்ணூலார்
. திரிபுரம் எரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையொர் பங்கர்
. மான்மறி ஏந்திய மைந்தர்
--திருஞானசம்பந்தர், திருப்பாம்புரம் தேவாரத் திருப்பதிகம்
சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள்
மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போதிலும்
--மஹாகவி பாரதியார், ஜய பாரத!
சான்று 3. எண்சீர்க் கழிநெடிலடி
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
. வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
--உலகநாதர், உலகநீதி
மங்கியதோர் நிலவினிலே கனவவிலிது கண்டேன்
. வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
. புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
--மஹாகவி பாரதியார், அழகுத் தெய்வம்
சான்று 4. ஒன்பதின் சீரடி விருத்தம்
இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின்
. எதிர்ந்த தானையை இலங்கும் ஆழியின் விலங்கியோன்
முடங்கு வாலுளை மடங்கல் மீமிசை
. முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோன்
--யாப்பருங்கலக் காரிகை
இடியது விழுந்த தோதான்
. இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி
. . இருசெவி நுழைத்த தோதான்
தடியது கொண்டே எங்கள்
. தலையினில் அடித்த தோதான்
. . தைரியம் பிறந்த தோதான்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, திலகர்
சான்று 5. பதின் சீரடி விருத்தம்
கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு
கூடி நீடும் ஓடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத
நாத என்று நின்று தாழ
--யாப்பருங்கலம்
கைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி
கட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்
முத்தலைப்ப டைக்க ரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கும்
முக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ
--குமரகுருபரர், சிதம்பர செய்யுட்கோவை 56
சான்று 6. பதினொரு சீரடி விருத்தம்
அருளாழி ஒன்றும் அறனோர் இரண்டும்
. அவிர்சோதி மூன்றொ டணியொரு நான்கும்
. . மதமைந்தும் ஆறு பொருண்மேல்
மருளாழி போழும் நயமேழும் மேவி
. நலமெட்டும் பாடும் வகையொன்ப தொன்ற
. . வரதற்கோ பத்தின் மகிழ
--யாப்பருங்கலம்
வீடு கொண்ட நல்லறம் பகர்ந்த மன்ப தைக்கெல்லாம்
. விளங்கு திங்க ணீர்மையால் விரிந்திலங்கும் வன்பினோன்
மோடு கொண்ட வெண்ணு ரைக்க ருங்கடற் செழுஞ்சுடர்
. முளைத் தெழுந்த தென்னவாய் முகிழ்த்திலங்கு போதியின்
--புத்தமித்திரனார், வீரசோழியம்
சான்று 7. பன்னிரு சீரடி விருத்தம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எண்சீர் விருத்தம் மேற்பட இன்று
எழுதப் படுகிற விருத்தம் பொதுவில்
பன்னிரு பதினான்கு பதினாறு வகையே.
பதினொரு சீரின் மேற்படும் அடிகளைப்
இரட்டை விருத்தம் என்று சொல்வரே. ... [வீரசோழிய உரை]
கருணையின் முழுகிய கயறிரி பசியக ரும்பே வெண்சோதிக்
. கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர் கன்றே யென்றோதும்
திருமகள் கலைகமக டலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை
. தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில் செங்கோ செங்கீரை.
--குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மைப் பிள்லைத் தமிழ் 9
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே
. வான மளந்த தனைத்து மளந்திடும் வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே
. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே.
--மஹாகவி பாரதியார், தமிழ்மொழி வாழ்த்து
சான்று 8. பதினான்கு சீரடி விருத்தம்
எய்த வம்பு தைக்கு முன்ன மற்றொர் பகழி தொட்டுவேள்
. ஏழை யங்க நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான்
செய்த வம்பு ரிந்தி லாதெ னுய்யு மாறு முண்டுகொல்
. திகழு மாட மதியு ரிஞ்சு கச்சி மேய செம்மலார்
--பூண்டி அரங்கநாத முதலியார், கச்சிக்கலம்பகம் 76
தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா!
...தரணி யெங்கும் இணையி லாத சரிதை கொண்டு செல்லடா!
அமிழ்த மென்ற தமிழி னோசை அண்ட முட்ட உலகெலாம்
...அகில தேச மக்க ளுங்கண் டாசை கொள்ளச் செய்துமேல்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, 20. இளந்தமிழனுக்கு
சான்று 9. பதினாறு சீரடி விருத்தம்
ஓங்குகயி லாயபரம் பரைநந்தி யடிகட்
. குறுமரபெட் டாவதுபிற் றோன்றலா யெங்கள்
. . உயர்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவற்
. . . குற்றபத்தொன் பதாவதுமுற் றோன்றலாய்ப் பொலிந்து
தேங்குசிவப் பிரகாச முதலியவாய் மலர்ந்து
. திகழுமா பதிசிவனே குன்றையுற மேவித்
. . திரிந்துமேர் வளங்கொண்டு பெருமையின்மே லாகித்
. . . சிறத்தலாற் செம்மேனிக் குமரவே ளத்தும்
--தி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சேக்கிழார்ப் பிள்லைத்தமிழ் 723
சந்தவிருத்தம்
பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள்
. பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்
. . பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள்
. . . படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள்
. எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்
. . இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள்
. . . எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும்
--குமரகுருபரர், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 1.9
*****
No comments:
Post a Comment