Friday, April 5, 2013

4.54. தளை வாய்பாடுகள், சான்றுகள்,

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.54. தளை வாய்பாடுகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மேலே கண்ட தளைவகை விவரம்
கீழே உள்ள வாய்பா டுகளில்
எளிதில் விளங்கிட நினைவில் வைப்போம்.

மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
என்பன இயற்சீர்த் தளைவாய் பாடாம்.

காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகுமே
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன காய்கனிச் சீர்தளை வாய்பாடு.

4.55. எழுதளைச் சான்றுகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரொன்றாசிரியத்தளை
வெற்றி வாழி வீரம் வாழி
...
உண்மை வாழி ஊக்கம் வாழி
---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை

வெற்/றி வா/ழி வீ/ரம் வா/ழி
உண்/மை வா/ழி ஊக்/கம் வா/ழி
தேமா தேமா தேமா தேமா

கண்ண தாசனின் கீழ்வரும் திரைப்பா
போன்று வருவது அரிதிலும் அரிது.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

நிரையொன்றாசிரியத்தளை
மங்கல குணபதி மணக்குளக் கணபதி!
---பாரதியார்

மங்/கல குண/பதி மணக்/குளக் கண/பதி!
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்

தேமா கூவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் கருவிளம் புளிமா தேமா 
என்னும் நிரல்கள் தனித்தோ சேர்ந்தோ
மன்னும் சுழலில் நேர்நிரை யொன்றும்
ஆசிரியத் தளைகள் மட்டுமே வந்து
அகவல் ஒழுகிசை தகவுற அமையுமே.

நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
வேறொன் றிலாது இவ்விரு தளைகளே
சீரிடை அடியிடை வருமா றெழுதினால்
சொற்களை வலிந்து கொள்வது நேர்ந்து
சொல்லும் பொருளின் ஓட்டம் தடைப்பட
இவற்றுடன் இயற்சீர் வெண்டளை விரவுதல்
அகவற் பாக்களில் மிகவும் காணலாம்.

அகவற் றளைகள் இயற்சீர் வெண்டளை
அகவற் பாவினில் விரவிடும் போது
அகவற் றளைகள் அதிகம் வந்தால்
அகவல் ஓசை தகவுறக் கேட்கும்.

இயற்சீர் வெண்டளை
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
---திருக்குறள் 001:03

மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டு வாழ்வார்.
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா காசு

தளைகள் குறளில் நோக்கும் போது
விளம்முன் நேரும் மாமுன் நிரையும்
சீரிடை அடியிடைத் தளைத்து வந்து
இயற்சீர் வெண்டளை பயில்வது காண்க.

வெண்சீர் வெண்டளை
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

யா/தா/னும் நா/டா/மால் ஊ/ரா/மால் என்/னொரு/வன்
சாந்/துணை/யும் கல்/லா/த வாறு.

(குறள் வெண்செந்துறை)
வெண்சீரின் வெண்டளையே வந்ததுகாண் இக்குறளில் 
சீரிடையே பாதமிடை காய்முன்நேர் வந்திடவே.

மேல்வந்த அடிகள் இரண்டிலும் கூட
வெண்சீர் வெண்டளை பயில்வது நோக்குக.

கலித்தளை
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய 
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள் 
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய 
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள் 

காய்ச்சீர்முன் நிரைவரவே கலித்தளையே இவ்வரிகளில்
சீரிடையே பயில்வதனை எளிதாக அறியலாமே.

ஒன்றிய வஞ்சித்தளை
யோகத்தினர் உரைமறையினர் 
ஞானத்தினர் நய‍ஆகமப் 
---கி.வா.ஜ.

யோ/கத்/தினர் உரை/மறை/யினர் 
ஞா/னத்/தினர் நய/‍ஆ/கமப் 

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க.

ஒன்றாத வஞ்சித்தளை
புனல்பொழிவன சுனையெல்லாம்; 
பூநாறுவ புறவெல்லாம்; 
வரைமூடுவ மஞ்செல்லாம்;
---யா.கா.வி.

கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க.

*****

No comments:

Post a Comment