கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4.57. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுதளை நிரல்களின் சான்றுகள் பலவும்
பழுதற விரிவில் நோக்கிய பின்னர்
எழுதளை நிரல்களின் வாய்பா டுகளைச்
சுழல்வரச் சுருக்கமாய்க் குறிப்பிடு வோமே.
நேரொன்றாசிரியத்தளை
நேரொன் றாசிரியத் தளைவர ஒரேவழி
தேமா தேமா தேமா தேமா
என்னும் சீர்களின் சுற்றில் மட்டுமே.
நிரையொன்றாசிரியத்தளை
நிரையொன் றாசிரியத் தளைவர ஒரேவழி
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
என்னும் சீர்களின் சுற்று மட்டுமே.
இயற்சீர் வெண்டளை
இயற்சீர் வெண்டளை இசைந்தே வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனிதனிச் சுற்றில்
ஒன்றோ பலவோ அடிகளில் உறுத்தலாம்:
புளிமா புளிமா புளிமா புளிமா
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை விளங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கலித்தளை
கலித்தளை துள்ளிக் கலித்து வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
ஒன்றிய வஞ்சித்தளை
ஒன்றிய வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி
ஒன்றாத வஞ்சித்தளை
ஒன்றாத வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி
*****
No comments:
Post a Comment