Wednesday, April 10, 2013

4.56. எழுதளை நிரல்கள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.56. எழுதளை நிரல்கள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாற்சீர் கொண்ட அளவடி யொன்றிலும்
நாற்சீர் அளவடி பல்கிடும் போதும்
சீரிடை அடியிடை ஒன்றெனத் தளைத்து
எழுவகைத் தளைகளும் எழுந்திடும் நிரல்வகை
சுழலுற வருவது கீழே காண்போம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்
நேரொன்றாசிரியத்தளை: தேமா
அடிகள் அனைத்திலும் தேமா வந்தால்
தேமா தேமா தேமா தேமா 
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
மாமுன் நேர்வரும் தொடரில் அமைய
நேரொன் றாசிரி யத்தளை பயின்று
ஏந்திசை யகவல் ஓங்கி வருமே.
சான்றாக
விண்ணும் மண்ணும் பண்ணும் விந்தை
எண்ணில் வாராக் கோடி கோடி
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.[

நிரையொன்றாசிரியத்தளை: கருவிளம்
அடிகள் அனைத்திலும் கருவிளம் வந்தால்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் 
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
விளம்முன் நிரைவரும் தொடரில் அமைய
நிரையொன் றாசிரி யத்தளை பயின்று
தூங்கிசை யகவல் ஏங்கி வருமே.
சான்றாக
விசும்பிலும் நிலத்திலும் நிகழ்ந்திடும் வியப்புகள்
விசித்தலில் அடங்கிடாக் கணக்கினில் விரியுமே ... ... ... [விசி=கட்டு]
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.[

இயற்சீர் வெண்டளை: புளிமா
அடிகள் அனைத்திலும் புளிமா வந்தால்
புளிமா புளிமா புளிமா புளிமா 
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
மாமுன் நிரைவரும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விசும்பும் நிலமும் நிகழ்த்தும் வியப்பு
விசியில் அடங்காக் கணக்கில் விரியும்
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.[

இயற்சீர் வெண்டளை: கூவிளம்
அடிகள் அனைத்திலும் கூவிளம் வந்தால்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் 
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
விளம்முன் நேர்வரும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விண்ணிலும் மண்ணிலும் நேர்ந்திடும் விந்தைகள்
எண்ணிலே வந்திடாக் கோடிகள் ஆகுமே
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.[

இயற்சீர் வெண்டளை: தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
அடிகள் அனைத்திலும் இப்படி நிரல்வர
இந்த நிரலே சுழலில் வந்து
மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
மாறி வந்திடும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விண்ணும் நிலமும் நிகழ்த்திடும் விந்தைகள்
எண்ணில் அடங்காக் கணக்கினில் ஆகுமே
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.[

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய்
(பல விகற்ப பஃறொடை வெண்பா
அடிகளிலே தேமாங்காய்ச் சீரொன்றே வந்துநின்றால்
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் 
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா
விண்ணோக்கின் மண்ணோக்கின் காண்கின்ற ஆச்சர்யம்
எண்ணேதும் கொள்ளாத எண்ணிக்கை யாயாகும்
மேல்வரிகள் காட்டிடுமே சான்று.[

வெண்சீர் வெண்டளை: கூவிளங்காய் 
(பல விகற்ப பஃறொடை வெண்பா
அடிகளிலே கூவிளங்காய்ச் சீரொன்றே வந்துநின்றால்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா
விண்வெளியில் மண்ணிலத்தில் காணுகின்ற விந்தைபல
எண்களிலே வந்திடாத கோடிவகை யாகிடுமே
மேல்வரிகள் காட்டிடுமே சான்று.[

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
(பல விகற்ப பஃறொடை வெண்பா
அடிகளிலே தேமாங்காய் கூவிளங்காய் வந்துநின்றால்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா
விண்மீதும் பூமியிலும் காண்கின்ற விந்தைகளே
எண்ணேதும் சுட்டிடாத எண்ணிக்கை யாகிடுமே
மேல்வரிகள் காட்டிடுமே சான்று.[

(தரவுக் கொச்சகக் கலிப்பா
கலித்தளை: புளிமாங்காய்
அடிகளிலே புளிமாங்காய் இதுவொன்றே வருமானால்
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் 
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பின்கண் நிலத்தின்கண் நிகழ்கின்ற வியப்பேபார்
விசியேதும் அடக்காத கணக்கொன்றின் விரிவாகும்
கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இதுமூன்றும்.[

கலித்தளை: கருவிளங்காய்
அடிகளிலே கருவிளங்காய் இதுவொன்றே வருமானால்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் 
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பினிலே நிலத்தினிலே நிகழ்ந்துவரும் வியப்புகளாம்
விசித்தலிலே அடங்கிடாத கணக்கினிலே விரிவதாகும்
கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இவைமூன்றும்.[

கலித்தளை: புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்
அடிகளிலே புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்வந்தால்
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் 
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பின்கண் நிலத்தினிலே நிகழ்கின்ற வியப்புகளாம்
விசியேதும் அடக்கிடாத கணக்கொன்றில் விரிவதாகும்
கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இவைமூன்றும்.[

(வஞ்சிப்பா, வஞ்சியினங்களில் அடங்காத அளவடி வஞ்சித்தளை அடிகள்
ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி 
அடிகள்தனில் புளிமாங்கனிக் கனிச்சீரிது முழுதும்வர
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி 
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்பின்வெளி நிலத்தின்வெளி நிகழ்ந்தேவரும் வியப்பானது
விசியேதிலும் அடங்காவரும் கணக்கொன்றதன் விரிவாகுமே
கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.[

ஒன்றிய வஞ்சித்தளை: கருவிளங்கனி 
அடிகள்தனில் கருவிளங்கனிக் கனிச்சீரிது முழுதும்வர
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி 
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்புமீதிலும் நிலவெளியிலும் தினம்நிகழ்கிற வியப்புகள்பல
விசியெதுவிலும் அடங்கிடாவரும் கணக்குதனிலே விரிந்துநிற்குமே
கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.[

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்
அடிகள்தனில் புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்வந்திடப்
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்பின்வெளி நிலவெளியிலும் நிகழ்ந்தேவரும் வியப்புகள்பல
விசியேதிலும் அடங்கிடாவரும் கணக்கொன்றினில் விரிந்துநிற்குமே
கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.[

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி 
அடிகள்தனில் தேமாங்கனிச் சீரொன்றென முற்றும்வர
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி 
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
அகவல்வரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்ணின்வழி மண்ணின்வழி நேர்ந்தேவரும் ஆச்சர்யமே
எண்ணேதுமே கட்டாதுள எண்ணிக்கையில் நின்றேவரும்
கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.[

ஒன்றாத வஞ்சித்தளை: கூவிளங்கனி 
அடிகள்தனில் கூவிளங்கனிச் சீரொன்றென முற்றும்வர
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி 
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
அகவல்வரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்வழியினில் மண்வழியினில் நேர்ந்திடுகிற ஆச்சரியமே
எண்வழியினில் கட்டவியலா எண்ணதுவினில் நின்றுவருமே
கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.[

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி கூவிளங்கனி நிரல்
அடிகள்தனில் தேமாங்கனி கூவிளங்கனி முற்றும்வர
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி 
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
அகவல்வரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்ணின்வழி மண்வழியினில் நேர்ந்தேவரும் ஆச்சரியமே
எண்ணேதுமே கட்டவியலா எண்ணிக்கையில் நின்றுவருமே
கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.[

*****

No comments:

Post a Comment