கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4.58. தளைகள் மயக்கம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஒவ்வொரு பாவுக்கும் ஒன்றோ மேலோ
அவ்வகைத் தளையே உரித்தா யிருப்பினும்
அவ்வகைத் தளைவர இயற்றுதல் கடினம்.
இதனால்
வெண்பா தவிர்த்த பாவகை இனங்களில்
தன்தளை தவிரப் பிறதளை மயங்குமே.
வெள்ளையுட் பிறதளை விரவா அல்லன
எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும்.
---யாப்பருங்கலம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தன்தளை யொன்றே வந்திடும் பாக்களில்
இன்னிசை இயல்பாய் நடப்பது காணலாம்
இன்னிசை இயல்பாய் நடப்பது என்பது
ஏந்திசைத் தூங்கிசை வகைகளில் வருவதே.
பிறதளை மயங்கி வந்திடும் பாக்களில்
ஒழுகிசை பிரிந்திசை வகைகள் வருதலால்
இன்னிசை இயல்பாய் நடத்தல் இயலாதே.
எல்லாத் தளையும் மயங்கினும் தன்றளை
அல்லாத் தளையாற் பாவினி தியலா
---யாப்பருங்கலம்
***
யாப்ப ருங்கல விருத்தி யுரைக்கும்
ஒருவகைப் பாவினில் பிறதளை மயங்குதல்
பலவகை களில்விகற் பித்து வருமே.
ஆசிரிய அடியுள் தளை மயக்கம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஆசிரிய அடியினில் மயங்கிடும் தளைவகை
வெண்டளை ஆசிரியம்
வெண்டளை கலித்தளை
வெண்டளை மட்டுமே
கலித்தளை மட்டுமே
வெண்டளை வஞ்சித்தளை
வஞ்சி ஆசிரியம்
வஞ்சி கலித்தளை
என்று பலவகை விகற்பித்து வருமே.
சான்று
(நேரிசை ஆசிரியப்பா)
நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின்
விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவ
னுண்டுசிலம் பேறி யோங்கிய விருங்கழைப்
படிந்தமாக் களிறு பயிற்றுமென்ப
மடியாக் கொலைவில் லென்னையர் மலையே.
--யாப்பருங்கலம்
நெடுவரைச் (இவெ) சாரற் (இவெ) குறுங்கோட்டுப் (கத) பலவின் (நேஆ)
விண்டுவார் (இவெ) தீஞ்சுளை (இவெ) வீங்குகவுட் (கத) கடுவ (நேஆ)
னுண்டுசிலம் (வெவெ) பேறி (நேஆ) யோங்கிய (நிஆ) விருங்கழைப் (நிஆ)
படிந்தமாக் (நிஆ) களிறு (இவெ) பயிற்றுமென்ப (கத)
மடியாக் (இவெ) கொலைவில் (நேஆ) லென்னையர் (நிஆ) மலையே.
***
கலி அடியுள் தளை மயக்கம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
கலிவரும் அடியினில் மயங்கிடும் தளைவகை
தன்தளை ஆசிரி யத்தளை யுடனே
தன்தளை வெண்டளை
தன்தளை ஆசிரியம் வெண்டளை
வெண்டளை மட்டும்
ஆசிரியம் மட்டும்
தன்தளை வஞ்சித்தளை
வஞ்சி ஆசிரியம்
வஞ்சி வெண்டளை
வஞ்சி ஆசிரியம் தன்தளை
வஞ்சி தன்தளை வெண்டளை
வஞ்சி வெண்டளை ஆசிரியம்
வஞ்சித்தளை மட்டுமே
என்று பலவகை விகற்பித்து வருமே.
சான்று
(சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா)
குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவிற் றகையுறூஉ மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனந் தோன்றப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
எனவாங்கு
ஆனொடு புல்லிய பெரும்புதன் முனையுங்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.
--யாப்பருங்கலம்
குடநிலைத் (இவெ) தண்புறவிற் (வெவெ) கோவல (நிஆ) ரெடுத்தார்ப்பத் (கத)
தடநிலைப் (நிஆ) பெருந்தொழுவிற் (கத) றகையுறூஉ (கத) மரம்பாய்ந்து (வெவெ)
வீங்குமணிக் (கத) கயிறொரீஇத் (வெவெ) தாங்குவனந் (வெவெ) தோன்றப்போய்க் (கத)
கலையினொடு (கத) முயலிரியக் (கத) கடிமுல்லை (கத) முறுவலிப்ப
எனவாங்கு
ஆனொடு (இவெ) புல்லிய (நிஆ) பெரும்புதன் (நிஆ) முனையுங் (நேஆ)
கானுடைத் (நிஆ) தவர்தேர் (நேஆ) சென்ற (நேஆ) வாறே.
***
வஞ்சி அடியுள் தளை மயக்கம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
வஞ்சி அடியினில் மயங்கிடும் தளைவகை
வெண்டளை மட்டும்
ஆசிரியம் மட்டும்
கலித்தளை மட்டும்
முச்சீர் அடிவரும் வஞ்சிப் பாவினில்
தன்தளை வெண்டளை
ஆசிரியம் தன்தளை
கலித்தளை தன்தளை
வெண்டளை ஆசிரியம்
வெண்டளை கலித்தளை
கலித்தளை ஆசிரியம்
என்று பலவகை விகற்பித்து வருமே.
கீழ்வரும் வஞ்சிப் பாவின் அடிகளில்
ஆள்கிற தளைவகை அறிந்தே
அடைப்புக் குறிக்குள் உள்ள
தளைவகை எண்ணுடன் ஒப்புதல் நோக்குக.
சான்று
(குறளடி வஞ்சிப்பா)
பூம்பொழிற் றண்கானல்
புனல்பொழி தண்படப்பை
வீநாறு பூங்காஞ்சிக்
கானாறு கோட்டெருமைக்
குழக்கன்று பிழைத்தோடிக்
காய்த்துறுப பெருஞ்செந்நெல்
தேய்த்துழக்கு மதுநோனார்
எனவாங்குத்
தீங்கழை வாங்கி விலங்கும்
பூம்புனல் ஊர புலம்பா னாளே.
--யாப்பருங்கலம்
[தளைகள்: தனிச்சொல் முன்னடிகள்:
இயற்சீர் வெண்டளை: 2; வெண்சீர் வெண்டளை: 6; கலித்தளை: 5]
தனிச்சொல் பின்னடிகள்:
இயற்சீர் வெண்டளை: 4; நேரொன்றசிரியத்தளை: 2;]
*****
4.59. தளைப் பயிற்சி
பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
*****
No comments:
Post a Comment