கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4.63. குறளடி முயற்சி: கட்டளைக் குறளடி
(இணைக்குறள் ஆசிரியப்பா)
நாமும் குறளடி முயன்றிடு வோமா?
நான்குமுதல் ஏழுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் குறளடி புனைவோம் முதலிலே.
கந்தன் சிந்தை வந்து விந்தை
என்னும் சொல்வகை அடியெது கைவர
நாமம் நம்முளம் ஏற்றுதல் செய்தல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
கந்தனை எண்ணி
வந்தனை செய்து
விந்தைகள் புரிய வேண்டிடு வோமே.
நான்கு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தன் நாமம்
சிந்தை ஏற்றில்
வந்தே நம்முள்
விந்தை செய்வான்.
[சீர்கள்: எல்லாம் தேமா; தளைகள்: எல்லாம் நேரொன்றாசிரியம்; ஓசை: ஏந்திசை யகவல்]
ஐந்து எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமம்
சிந்தையில் ஏற்ற
வந்தே நம்முளம்
விந்தைசெய் வானே!
[சீர்கள்: கூவிளம் தேமா; தளைகள்: இயற்சீர் வெண்டளை நேரொன்றாசிரியம்;
ஓசை: ஒழுகிசை யகவல்]
ஆறு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமமே
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் மனதில்
விந்தைகள் செய்வானே!
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]
கந்தனின் நாமத்தைச்
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் உள்ளத்தில்
விந்தைகள் செய்வானே!
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: எல்லாம் வெண்டளை; ஓசை: ஒழுகிசைச் செப்பல்]
ஏழு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் திருநாமம்
சிந்தையில் ஏற்றினாலே
வந்துநம் மனதிலே
விந்தைகள் செய்திடுவான்.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]
4.63. குறளடி முயற்சி: சீர்வகைக் குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கட்டளைக் குறளடி முயன்ற பின்னர்
சீர்வகைக் குறளடி முயலுதல் எளிது
சீர்கள் இரண்டில் தளையொலி தகைக்கவே.
பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்ய
வஞ்சிப் பாவில் தனிச்சொல் முன்வரும்
கொஞ்சப் பகுதியிது; மீதம் உள்ளதைத்
தக்க தனிச்சொல் சுரிதகம் இவற்றின்
பக்க பலம்சேர்த்துப் பின்னர்க் காண்போம்.
விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ?
இதுவும் வஞ்சிப் பாவின் பகுதி
இனிவரும் தனிச்சொல் சுரிதகம் கொண்டு
இதனின் எதிர்மறை பின்னர் முடிப்போம்.
*****
4.63. குறளடிப் பயிற்சி
பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
*****
No comments:
Post a Comment