Saturday, May 25, 2013

4.64. சிந்தடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.64. சிந்தடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இருதளை யடுத்தே இயலும் சிந்தடி
சீர்வகை யாயின் முச்சீர் அமையும்
எழுத்தடி யாயின் ஏழெட் டொன்பதே.

வஞ்சிப் பாவிற் குரித்தென அமையினும்
வெண்பா ஈற்றடி சிந்தடி யாய்வரும்
நேரிசை யகவலின் ஈற்றய லடியிலும்
இணைக்குற ளகவலின் இடையிலும் வருமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
தொல்காப்பியம் தரும் அடிகளின் பெயர்கள்
எழுத்துகள் கொண்டு இயல்வன ஆயினும்
சங்க காலம் தொட்டே பாக்கள்
சீர்வகை அடிகளில் யாக்கப் பட்டன
இதனால்
சீர்களை எண்ணியே அடிகளின் பெயர்களைச் 
காரிகை போன்ற நூல்களும் குறித்தன
எழுத்துகள் எண்ணும் கட்டளை அடிகள்
வழக்கில் வந்தது பிற்கா லத்தே.

கட்டளைச் சிந்தடிச் சான்று
அடிகள் தோறும் எழுத்துகள் ஒன்பதில்
முடிவுறும் சிந்தடிச் சான்று கீழே.
இவ்வகை அடிகள் வருவன அரிதே.

இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 736

சீர்வகைச் சிந்தடிச் சான்று
வாளா வார்கழல் வீக்கிய
தாளார் தாமுடைந் தோடினார்
நாளை நாணுடை மங்கைமார்
தோளை நாணிலர் தோயவே.
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 1355

நீறணி மேனியன் நீள்மதியோ 
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரம்
சேறணி வளவயற் சிரபுரமே
---சம்பந்தர் தேவாரம், 1177

பூவார் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி.
---இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், கானல் வரி, 26

வள்ளியப்பா பாப்பாப் பாட்டில் நெஞ்சை
அள்ளும் எளிய சொற்கள் வேய்ந்த
சிந்தடி சீராய்ச் சிரிப்பது காண்பீர்.

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒண்ணு வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்
பந்து போல ஆனது
பலமாய் நானும் ஊதினேன்
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தாள் பார்க்கலாம்--அல்லது
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்!
---குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

வெண்பா ஈற்றடிச் சான்றுகள்:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்ணிறப் பாவெனிலும் வண்ணங்கள் இறைக்கும்
வெண்பாவின் ஈற்றடியில் பலவகை ரசங்களில்
கண்ணையும் கருத்தையும் கவரும் சான்றுகள்
திண்ணைப் பேச்செனப் பறிமாறிக் கொள்வோமே.

திருக்குறள்
என்புதோல் போர்த்த உடம்பு.
இம்மையும் இன்பம் தரும்.
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
ஞாலத்தின் மாணப் பெரிது.
அன்றே மறப்பது நன்று. 5
எச்சத்தாற் காணப் படும்.
பிறவும் தமபோல் செயின்.
ஆரிருள் உயித்து விடும்.
மலையிணும் மாணப் பெரிது.
நாவினாற் சுட்ட வடு. 10
என்றும் இடும்பை தரும்.
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
அழுக்காறு இல்லாத இயல்பு.
தீவினை என்னும் செருக்கு.
தீயினும் அஞ்சப் படும். 15
ஊதியம் இல்லை உயிர்க்கு.
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
எல்லா உயிருந் தொழும்.
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மூக்கிற் கரியார் உடைத்து. 20

ஔவையார்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
குலத்தளவே ஆகுமாம் குணம்.
எல்லார்க்கும் பெய்யும் மழை.
தீதொழிய நன்மை செயல். 5
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
பாவிகாள் அந்தப் பணம்.
எனையாளும் ஈசன் செயல்.
கல்லாதான் கற்ற கவி.
முற்பவத்தில் செய்த வினை. 10

ஈற்றடிப் பழமொழிகள்: முன்றுறை அரையனார்
கற்றலிற் கேட்டலே நன்று.
பாம்பறியும் பாம்பின் கால்.
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.
அணியெல்லாம் ஆடையின் பின்.
திருவினும் திட்பம் பெறும். 5
கல்தேயும் தேயாது சொல்.
நாவிற்கு நல்குரவு இல்.
குன்றின்மேல் இட்ட விளக்கு.
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.
தங்களை நாய்குரைத் தற்று. 10
நுணலும்தன் வாயால் கெடும்.
இருதலைக் கொள்ளியென் பார்.
மகனறிவு தந்தை அறிவு.
தமக்கு மருதுவர் தாம்.
தட்டாமல் செல்லாது உளி. 15
கண்டதூஉம் எண்ணிச் சொல்.
புலித்தலையை நாய்மோத்தல் இல்.
முறைமைக்கு மூப்பிளமை இல்.
ஆயிரம் காக்கைக்கோர் கல்.
அஞ்சுவார்க் கில்லை அரண். 20
தனிமரம் காடாதல் இல்.
வித்தின்றிச் சம்பிரதம் இல்.
ஒன்றுக் குதவாத ஒன்று.
தாய்மிதித்(து) ஆகா முடம்.
இறைத்தோறும் ஊறும் கிணறு. 25

தனிப்பாடல் ஈற்றடிகள்
ஔவையார்
கொடையும் பிறவிக் குணம்.
கீச்சுக்கீச் சென்னுங் கிளி.
கூறாமல் சந்நியாசங் கொள்.
எறும்புந்தன் கையாலெண் சாண்.
புலவர்க்கும் வெண்பா புலி.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.

திருவள்ளுவ நாயனார்
வருவது தானே வரும்.
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து.
அப்பாலும் பாழென் றரி.

காளமேகப் புலவர்
பாம்பாகும் வாழைப் பழம்.
ஆடுபரி காவிரியா மே.
துப்பாக்கி யோலைச் சுருள்.
பூசணிக்காய் ஈசனெனப் போற்று.
குடத்திலே கங்கையடங் கும். 5
போட்டாளே வேலயற்றுப் போய்.
அன்னமிறங் காமலலை வாள்.
எலியிழுத்துப் போகிற தென்.
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
குதிரை விற்றவனைக் கொண்டு. 10

*****

No comments:

Post a Comment