Friday, February 15, 2013

4.42. சீர் வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.42. சீர் வகைகள்

(கலிவிருத்தம்)
நேரசையும் நிரையசையும் பல்வகையில் இணந்து
ஓரசைமுதல் நான்கசைவரை உருவாகும் சீர்களில்
ஈரசையும் மூவசையும் அதிகம் பயின்றும்
நான்கசைச் சீர்கள் அருகியும் வருமே.

(குறள் வெண்செந்துறை)
சீர்களின் வகைகளை நினைவினில் வைக்கச்
சீர்களின் வாய்பா டுகள்மிக உதவுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீர்வகைப் பெயர்தன் அசைத்தொகை பொறுத்து
ஓரசை ஈரசை மூவசை நாலசை
என்றே நால்வகைப் பெயர்பெறு மாயினும்
செய்யுட் குரிமை பூண்டு நிற்கும்
திறமும் பிறவும் நோக்கி யவற்றை
அசைச்சீர் அகவற்சீர் வெண்சீர் வஞ்சிச்சீர்
பொதுச்சீர் என்ற ஐவகைப் பெயர்களில்
அழைப்பது செய்யுள் வழக்கினில் அமையுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீ ரென்பது ஓரசைச் சீரே
அகவற் சீர்கள் ஈரசை வகைகளே
வெண்சீ ரென்பது மூவசைக் காய்ச்சீர்
வஞ்சிச் சீர்வகை மூவசைக் கனிச்சீர்
பொதுச்சீ ரென்பது நாலசைச் சீர்களே.

4.43. ஓரசைச் சீர்

(ஆசிரியத் தாழிசை)
அசையொன்று தனிநின்று இசைநிறைக்க வருவதே
அசைச்சீர் என்னும் ஓரசைச் சீராம்.
அசைச்சீர் இரண்டே தனிநேர் தனிநிரை.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீர் பெரிதும் வெண்பா ஈற்றிலும்
கலிப்பா அம்போ தரங்க ஈற்றிலும்
வஞ்சி விருத்தம் இடையிலும் வருமே.

(குறள் வெண்செந்துறை)
நாள் மலர் காசு பிறப்பு
என்பது ஓரசைச் சீர்வாய் பாடு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர் நிரை நேர்பு நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்கள்.
இறுதிச் சீரென வெண்பாவின் ஈற்றடியில் 
இவற்றில் ஓன்று மட்டும் வருமே.

காசு பிறப்பு ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு
நிரையுடன் சேர்ந்தா லாகும் நிரைபு.

தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லாத நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது நேர்பு
நிரையுடன் குற்றுகரம் சேர்வது நிரைபு.

மது-எனும் அசைச்சீர் நேர்பா மலரா?
து-எனும் எழுத்து குற்றுகர மாயினும்
ம-வெனும் எழுத்து தனிக்குறி லாகிட
மதுவெனும் அசைச்சீர் தனிநிரை யாகி
மலரெனக் குறிக்கும் வாயா டாகுமே.

மாசு என்பதில் குற்றிய லுகரம்
மாவெனும் தனிநெடி லுடனே சேர்வதால்
காசெனும் வாய்பா டினிலே வருமே.

பந்து என்பதன் வாய்பா டென்ன?
பந்து என்பதில் பந்-எனும் நேரசை
குறிலொற்றுப் பெற்றதால் தனிக்குறி லன்று
குற்றுகரம் சேரக் காசு ஆகுமே.

உவர்-எனும் தனிநிரை அசைச்சீர் மலரே
உவர்ப்பு என்று வந்தால் அதுவே
உவர்-உடன் சேரும் குற்றுக ரத்தால்
பிறப்பெனும் வாய்பா டாகி வருமே.

(சிந்தியல் வெண்பா)
நாள்-இல் முடிவது இந்தக் குறட்பா:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்-இல் முடிவது இந்தக் குறள்வெண்பா:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

காசு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறப்பு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

4.43. ஓரசைச் சீர் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

Thursday, February 14, 2013

4.40. சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.40. சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எத்தனை பொருட்கள் சீரெனும் சொல்லுக்கு!
அத்தனை யாகிவரும் சீரெனும் உறுப்பு
நேரடி யாகவோ மறைமுக மாகவோ.

செய்யுளின் கட்புலன் உறுப்பெனச் சீரே! ... [கட்புலன்=கண்ணுக்குச் சட்டெனத் தெரியும்]
செய்யுள் என்பதோர் செடியெனக் கொண்டால்
செடியின் இலைகளே சீர்கள் ஆகுமே
செடியின் பூக்களே இலைமறைத் தொடைகளாம் ... [தொடை=எதுகை, மோனை போன்றவை]
கிளைகளே அடிகளாய் விளைந்து வந்திடக்
கிளைகளில் இணையும் காம்பே தளைகளாம்.

செடியில் இலையே கட்புலன் உறுப்புபோல்
செய்யுளில் சீரே கட்புலன் உறுப்பாம்
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே.

சீரே செய்யுளின் செல்வம் அழகு
நன்மை பெருமை மதிப்பு புகழே
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியுமே.

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

சீர்களே மேல்வந்த பாவின் பொற்காசு 
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பிலே புகழிலே.

சீர்களே பெரும்பங்கு செய்யுளின் இயல்பில்
சீர்களே துலாமென ஓசையை நிறுக்கும் 
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓங்கி ஒலிக்குமே.

இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.
காரணித்துக் காதலித்துநம் முன்னோர் இட்டபெயர்
ஆரணிய மெனவிரியும் யாப்புறுப் புகளிலே.

4.41. சீரென்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ பயின்று
இசைந்து ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே.

நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையிலே
தாளம் என்பதில் மூன்றென உறுப்புகள்
தாளத்தின் காலச்சுழல் பாணியில் தொடங்குமே
தாளத்தின் நீடிப்பு தூக்கினில் அடங்குமே
தாளத்தின் முடிவு சீரினில் அடங்குமே
என்றே சீரினைப் பாணியோ(டு) ஒப்பிடுவார்.

சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளவு வரலாம்
சீர்வரும் சொற்பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசையே சொற்களைப் பிரிக்குமே.

(குறள் வெண்பா)
வருகிற பாக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’
பிரியும் வகையுளி காண்.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வகையுளி இல்லாக் குறளொன்று கேட்பின்
அகர முதல உளது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

4.33. அசை வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.33. அசை வகைகள்

[மேல் விவரங்கள்: 3.1. அசையும் சீரும்]
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்றே சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே.

அசையில் இரண்டு வகைகள் உண்டு:
நேரசை நிரையசை என்பன அவையே.
நேரே வருவதால் நேரனப் பட்டது:
ஒன்றே எழுத்தால் ஆவதால் நேரசை.

ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்:
எழுத்துகள் இரண்டு தொடர்ந்தே வந்து
இணைந்து அசைவதால் நிரையசை யாகுமே.

குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ
ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும்
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும் ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.

4.34. நேரசை என்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரசை வந்திடும் வகைகள் நான்கு
ஒருகுறில் தனித்து வருவது நேரசை
ஒருகுறில் ஓற்றடுத்து வருவதும் நேரசை ... ... [ஒற்றடுத்து வருவது = அடுத்து வருவது ஒற்றெழுத்து]
ஒருநெடில் தனித்து வருவது நேரசை
ஒருநெடில் ஓற்றடுத்து வருவதும் நேரசை.

’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின் 
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்நேர்’ ஆகுமே.

4.35. நிரையசை என்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நிரையசை வந்திடும் வகைகள் நான்கு
குறில்கள் இரண்டு வருவது நிரையசை
குறிலிணை ஓற்றடுத்து வருவது நிரையசை
குறில்நெடில் இணைந்து வருவது நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத்து வருவது நிரையசை.

’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுத்தது.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

ஒற்றில்லா நேரசையில் ஓரெழுத் திருக்குமே
ஒற்றில்லை யென்றால் முதல்வரும் நெடிலே.
’உமா’ என்பது குறில்நெடில் நிரையசை
’மாவு’ நெடில்குறில் தனித்த நேரசை

ஒற்றில்லா நிரையசையில் இரண்டெழுத் திருக்குமே
அவற்றுள் முதலது என்றும் குறிலே.
’உமா’வெனும் நிரையில் முதலது குறிலே.

4.36. அசையும் சொல்லும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசைதனில் வருவது உண்டு
சொல்லொன்று வரலாம் நேரசை ஒன்றில்
சொல்லொன்றோ இரண்டோ வரலாம் நிரையசையில்.

தனிக்குறில் நேரசை இறுதியில் வருவதால்
தனியே பொருளது தராது நிற்குமே
ஒற்றுடன் சேர்ந்தால் பொருள்தர வருமே
’பல்லி’ எனும்சொல் நேர்நேர் ஆவதில்
’பல்’லெனும் நேரசை ஒற்றால் பொருள்பெறும்
’லி’யெனும் நேரசைப் பொருளேது மில்லை.

தனிநெடில் நிரையசை பொருள்தர வரலாம்
தனிநெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’தா-பால்’ என்னும் சொற்களில் சான்றுள.

குறில்நெடில் நிரையசை பொருள்தர வரலாம்
குறில்நெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’உமா-இறால்’ என்னும் சொற்களில் சான்றுள.

நேரசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவது பொதுவில் காண்பது
’என்/ன கே/ளாய்’ எனும்தொடர் சான்றாம்.

நிரையசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவதும் பொதுவில் காண்பதே
’வரு/வினை அறுப்/பதால்’ எனும்தொடர் சான்றாம்.

*****

Wednesday, February 13, 2013

4.30. அசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.30. அசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அவனின்றி அசையா தணுவும் எனும்போது
அசையென்றால் அதிர்வாகும் என்பது விளங்கும்
அணுக்கள் தனியே அசைவது அதிர்வு
அணுக்கள் சேர்ந்தே அதிர்வுகள் சீர்ப்பட்டு
ஒருமித் தசைவது அசையென அறியலாம்.

அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
அசையின் இயக்கம் நுடங்கி விரிந்து ... [நுடங்குதல்=மெலிதல்]
இசைந்தே ஒலிக்கும் இதயத் துடிப்பென.

4.31. யாப்பின் அசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
அசையே செய்யுளின் தனிமம் ஆகுமே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
இசைந்து சீர்களில் இணைந்து 
தளைகளில் தழைத்து 
தொடைகளில் தொடுத்து
இழைந்தே ஒலிக்க எழுந்திடும் கவிதையே.

4.32. எழுத்தும் அசையும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்து அசைந்திடும் போது
ஓசைகள் குறையும் வலுவும் பெறுமே.

’தாஅ’ என்று கேட்கும் போது
தாவின் ஓசை முழுவதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்ந்து ஒலிகள் மழுங்கி
’தா’-வின் ஓசை குறைந்தே ஒலிக்குமே.

’குயி’எனச் சொல்லும் போ(து)அத் தொடரிலே
வல்லின மெய்யின ஒலிகள் முரண்படப்
பொருளேது மின்றிக் கேட்கும் அசைந்தே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அதுவே ’குயில்’எனச் சொல்லும் போது
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்து
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
குயில்கள் பாடும் இன்னிசை சுட்டுமே!

எழுத்தும் தானே தனியே அசையும்.
தனியே வருகிற குறில்நெடில் எழுத்துகள்
தனித்தனி அசையென் றாகிட முடியும்.
தனிவரும் ஒற்றை எழுத்தே
தனிச்சொல் லாகிப் பொருள்தர வரினே
ஓரெழுத் தொருமொழி என்றதை அழைப்பரே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
’தா’வெனில் தருதல் ’பா’வெனில் பாட்டு
’கா’வெனில் சோலை ’பூ’வெனில் மலராம்
’உ’வெனில் சிவனார் ’கு’வெனில் பூமி
’அ’வென்பது சுட்டும் ’தீ’யென்பது சுடும்
’மா’வெனில் திருமகள் ’ம’வெனில் திருமால் 
’யா’வெனும் வினையடிப் பிறந்தது யாப்பே.

*****

Tuesday, February 12, 2013

4.22. எழுத்தும் மற்ற உறுப்புகளும்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.22. எழுத்தும் மற்ற உறுப்புகளும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்து என்பது தனியெழுத் தாக
மொழியெனும் மாளிகை யெழுப்பும் கற்களாய்
ஒற்றை ஒலியின் தனிமம் எனவே
கற்றையாய்ச் சேர்ந்து சொல்லென் றாகி
மனதில் உள்ளதை வெளியில் கொணர்ந்து
கனவினை விதைக்கும் கனியென் றுதவுமே.

எழுத்தே தனித்தோ எழுத்துடன் சேர்ந்தோ
அக்ஷரம் என்று வடசொல் குறிக்கும்
ஸிலபிள் என்று ஆங்கிலம் குறிக்கும்
அசையென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்
செய்யுளின் அடிப்படை உறுப்பென் றாகி
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசையுமே.

எழுத்து என்பது உருவிலோ ஒலியிலோ
மோனை எதுகை முரணெனும் வகைகளில்
தொடையெனும் உறுப்பில் தொடுக்க உதவுமே.

இன்னும் எழுத்தெனும் மன்னிய யுறுப்பு
இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பென அசைந்து வருமே.

4.23. எழுத்தியல் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

4.18. குறுக்கங்கள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.18. ஐகாரக் குறுக்கம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஐ-யெனும் உயிரெழுத்து தனித்து வந்தால்
இரண்டு மாத்திரை யளவில் ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பது
ஐகாரக் குறுக்கும் என்ற பெயர்பெறுமே.
ஐப்பசி, தலைவன், வலை,கலை சான்றுகள்.

4.19. ஔகாரக் குறுக்கம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஔ-வெனும் உயிரெழுத்து தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வரும்போதும்
அளபெடுத்து வரும்போதும்
தன்னிரு மாத்திரை குன்றாது ஒலிக்குமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அதுவே உயிரெழுத்து உயிர்மெய் என்று 
சேர்ந்தால் முதலில் மட்டுமே வந்து
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்து
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே:
ஔவை, வௌவால், கௌதாரி சான்றுகள்.
4.20. மகரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ணகர, னகர மெய்களின் முன்னும்
வகரத்தின் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பது.

கேண்ம் = கேளும், மருண்ம் = மருளும்
போன்ம் = போலும், சென்ம் = செல்லும்
வரும் வங்கம் = வரும் கப்பல்
என்பன மகரக் குறுக்கச் சான்றுகள்.
4.21. ஆய்தக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் என்பது.

அல் + திணை = அஃறிணை
கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃடீது
என்பன ஆய்தக் குறுக்கச் சான்றுகள்.

*****

Monday, February 4, 2013

4.16. குற்றியலுகரம்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.15. முற்றிய லுகரம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் என்றபெயர் பெறுமே
இஃது தனிக்குறில் அடுத்தும்
மெல்லின இடையின மெய்மேல் ஏறியும்
வருவது சான்றாக: ’நகு,தடு, தபு,பசு, 
அது,அறு, தும்மு, கதவு, உண்ணு’
சொற்களில் உகரம் முழுவதும் ஒலிக்குமே.

4.16. குற்றியலுகரம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே மாத்திரை அரையாய்க் குறுகி
ஒலித்திடும் உகரமே குற்றிய லுகரமாம்.

குசுடு துபுறு என்று உகரம்
வல்லின மெய்யுடன் சேரும் போது
வல்லின உயிமெய்க் குற்றுகர மாகித்
தனிக்குறில் அல்லாத மற்றைச் சொற்களில்
வந்திடும் போது குற்றிய லுகரமாய்க்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்குமே.

வல்லின உயிர்மெய் ஆறினில் மட்டுமே
குற்றிய லுகரம் குன்றி வருமே
மெல்லின இடையின உயிர்மெய் களிலே
உகரம் குன்றி ஒலிப்பது இல்லையாம்.

தும்பு என்பது குற்றிய லுகரம்
தும்மு என்பது முற்றிய லுகரம்
நஞ்சு என்பது குற்றிய லுகரம்
நஞ்ஞு என்பது முற்றிய லுகரம்
உண்டு என்பது குற்றிய லுகரம்
உண்ணு என்பது முற்றிய லுகரம்
குடகு என்பது குற்றிய லுகரம்
குடவு என்பது முற்றிய லுகரமே.

கு-குரு சு-சுகம் து-இது என்று
கு-சு-து என்னும் ஓரெழுத்துச் சொற்கள்
தனிக்குறிலாய் நிற்றலால் குற்றுகர மாகாது.

தனக்கு முன்வரும் அயலெழுத்தின் வகையொட்டிக்
குற்றிய லுகரம் வந்திடும் போது
ஆறு வகைப்பட்ட தொடர்களில் அமையுமே.

வல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’சுக்கு மச்சு பட்டு பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு கூத்து காப்பு உற்று’
என்பன வன்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

மெல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’சங்கு பஞ்சு வண்டு பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு சாந்து பாம்பு சான்று’
என்பன மென்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

இடையின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’தேய்கு ஆர்கு அல்கு --வ்கு மாழ்கு தெள்கு’ ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து --வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு --வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

இடைத்தொடர் வகையில் சுடுறு என்பன
ஈற்றயலிற் குற்றுகர மாகக் கொண்டு
அமையும் சொற்கள் இலையெனக் காண்க.

எஞ்சிய குதுபு குற்றிய லுகரமும்
இடையினம் மெய்கள் அனைத்தையும் ஈற்றயலின்
கொள்வ தில்லை என்றும் காண்க.

உயிர்மெய் யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’படகு நகாசு அகடு தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

தனிநெடி லெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’பாகு காசு நாடு காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் என்பது
தனிநெடில் பின்வரும் ஈரெழுத்துச் சொற்களாம்.
’தகாது ஆகாது’ போன்று இரண்டின்
மிஞ்சிய எழுத்துவரும் சொற்களில்
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராகிவிடும்.

ஆய்த எழுத்தை ஈற்றயலில் கொண்டவை
ஆய்தத்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
குற்றியலுகரச் செயல்பாடு
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
குற்றிய லுகரச் செயல்பாடு பற்றி
மொழியியல் கருத்து மகிழ்ச்சி தருவது
வல்லின மெய்கள் இறுதியில் வந்தால் 
எளிய தல்ல அவற்றை ஒலித்தல் 
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா?
எனவே
காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாகி
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றிய லுகரம் ஆகி விடுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலம் பயிலும் இற்றைநாள் தமிழில்
ஓங்குவது காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட் ஷாப் டேப் பார் ... [chalk pass boat shop tape bar]
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்து
சாக்கு பாசு போட்டு ஶாப்பு டேப்பு பாரு
என்றே பேச்சினில் ஒலிக்கும் அன்றோ?

4.17. குற்றியலிகரம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்
உகரம் இகர மாகத் திரிந்து
அரைமாத் திரையாய்க் குறைந்து ஒலித்து 
குற்றிய லிகரம் ஆகி விடுமே.

நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
வருவது குற்றிய லிகரச் சான்றுகள்.

இவ்வாறே மியாவென் றுவரும் அசைச்சொல்லில்
மகரம் மேலூர்ந்த உகரம் மாத்திரை
குன்றி ஒலிப்பதும் குற்றிய லிகரம்.

கேள் + மியா = கேண்மியா என்றும்
செல் + மியா = சென்மியா என்றும்
வருவதும் குற்றிய லிகரச் சான்றுகள்.

*****

Saturday, February 2, 2013

4.9. அளபெடை யென்பது

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.9. அளபெடை யென்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளபு என்பது மாத்திரை அளவு
அளபு எடுத்தல் மாத்திரை நீளுதல்
அளபு எடுத்துத் தனதுமாத் திரையின்
நீண்டு ஒலிப்பதே அளபெடை யாகும்
அளபெடுத்தல் குறிக்க அளபெடுத்த எழுத்தின்
இனவெழுத் தொன்று தொடர்ந்து வருமே.

செய்யுளில் ஓசை குறையும் போது
உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் 
ஙஞண நமன வயலள பத்தும் 
தனியே நிற்கும் ஆய்த எழுத்தும் 
தத்தம் மாத்திரை நீண்டு ஒலிப்பதே
அளபெடை என்று அழைக்கப் படுவது
அளபெடை இருவகை: உயிரும் ஒற்றும்.

4.10. உயிரளபெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடில்பின் தக்க குறிலே வந்து
ஒசை நிரப்பும் உயிரள பெடையாம்
மூன்று மாத்திரை யாக ஒலிக்கும்.
உயிரள பெடையில் மூவகை யுண்டு
செய்யுளிசை இன்னிசை சொல்லிசை யென்றே.

அளபெடுக்கும் போதோர் இனவெழுத்து தோன்றுமே:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

4.11. செய்யுளிசை அளபெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
முதலிடை கடையில் அளபெடுத்து வந்தால்
செய்யுளிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

’ஆஅதும் என்னுமவர்’ என்று முதலிலும்,
’தெய்வந் தொழாஅள்’ என்று இடையிலும்,
’நல்ல படாஅ’ என்று கடையிலும்
செய்யுளிசை அளபெடுத்து வருவது காண்க.

அதும்-தொழாள்-படா என்னும் சொற்கள் தம்முள்
ஓரசைச் சீராய் நிற்றல் கருதி
ஓசை நிறைக்க அவற்றை நீட்டி
ஈரசைச் சீர்க ளாக்கி எழுதி
அசையும் தளையும் குன்றா திருக்கச்
செய்த முயற்சியே செய்யுளிசை யளபெடை.

சான்றுகள்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
--திருக்குறள் 653

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
--திருக்குறள் 1115

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
--திருக்குறள் 55

4.12. இன்னிசை அளபெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
இன்னிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’ 
என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.
’கெடுப்பதூம், உடுப்பதூம், உண்பதூம்’ சொற்கள்
’கெடுப்பதும் உடுப்பதும் உண்பதும்’ என்றே
ஈரசைச் சீரின் இலக்கணம் அமைந்தும்
இன்னிசை நோக்கி அளபெடுத்தல் காண்க.

சான்றுகள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
--திருக்குறள் 15

உடுப்பதூஉம் உணபதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்.
--திருக்குறள் 1079

4.13. சொல்லிசை அளபெடை

(நேரிசை ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
ஒருசொல் மற்றொன் றாக வேறுபடுத்தி,
சொல்லிசை கூட்ட வருவது
சொல்லிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லிசை அளபெடை வந்திடும் போது
பெயர்ச்சொல் லொன்று வினையெச் சமாகும்.
’நசைஇ தொகைஇ வளைஇ அளைஇ’
’விரும்பி தொகுத்து வளைத்து அளந்து’
என்பன சொல்லிசை அளபெடைச் சான்றுகள்.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
"உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்"
என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
அளபெடுத்து நசைஇ, விரும்பி என்று
ஆனது சொல்லிசை அளபெடைச் சான்று.

சான்றுகள்
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்.
--திருக்குறள் 1263

அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ 
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
--தொல்காப்பியம், பொருள்.அகத். 39

நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
--நப்பூதனார், முல்லைப்பாட்டு 1-2

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
--திருக்குறள் 91

4.14. ஒற்றள பெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுளில் ஓசை குறையு மிடத்து
மெய்யெழுத்து மிகுந்து ஒலித்து பாட்டில்
ஒசை நிரப்புவது ஒற்றள பெடையாம்.

செய்யுள் ஓசை குறையு மாயின்
ஈடு செய்ய இடைகடை அளபெடுத்து
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுத் ததுகாட்ட மீண்டும் எழுதப்படும்.

குறிலின் குறிலிணைக் கீழ்வரும் ஒற்று
இடைகடை அளபெடுத்து மிக்கு வரும்.
’எஃஃகு இலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள்.

’எஃஃகு, இலங்கிய’ தனிக்குறிற் கீழிடை
’கண்ண் கருவினை’ தனிக்குறிற் கீழ்கடை
’கலங்ங்கு நெஞ்சமிலை’ குறிலிணைக் கீழிடை
’மடங்ங் கலந்த’ குறிலிணைக் கீழ்க்கடை
ஒற்றள பெடையாய் வருவது காண்க.

சான்றுகள் அனைத்திலும் ஒற்றள பெடுத்ததால்
ஓரசைச் சீர்கள் ஈரசை யாகிச்
செய்யு ளொசை நிறைத்தல் காண்க.

சான்றுகள்
எஃஃகிலங்கிய கையராயின்னுயிர்
வெஃஃகுவார்க் கில்லைவீடு.

பூஉந் தண்ண் புனமயில் அகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பப்
--சிதம்பரச் செய்யுட் கோவை 12

அளபெடைச் சீர்களை அலகிடும் போது
தளைகள் தட்டில் அலகு பெறுமே
தளைகள் ஒன்றின் அலகு பெறாது.

அளபெடை மாத்திரை நோக்கும் போது
உயிரளபெடை ஒலிப்பது மூன்றுமாத் திரையில்
ஒற்றளபெடை ஒலிப்பது ஒருமாத் திரையிலே.

*****

Friday, February 1, 2013

4.3. எழுத்தின் வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.3. எழுத்தின் வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்.
எழுத்தெனப் படுவது எழுதப் படுவது 
என்று இலக்கண நூல்கள் குறிக்குமே.

எழுத்தெனப் படுவது மூவகைப் படுமே
உயிரும் மெய்யும் சார்பும் என்று.
உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்
முதல்சார்ந்து வந்தது சார்பெழுத் தாகுமே.

முதலில் வருவது மொத்தம் முப்பது
உயிரெழுத் துகளில் பத்தும் இரண்டும்
மெய்யெழுத் துகளில் பத்தும் எட்டுமே.

4.4. உயிரின் வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்
உயிரில் வகைகள் மூன்று உண்டு
குறிலே நெடிலே அளபெடை என்று.
குறில்கள் ஐந்து: அ,இ,உ, எ,ஒ-என,
நெடில்கள் ஏழு: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.

4.5. மெய்யின் வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்
மெய்யில் வகைகள் மூன்று உண்டு
வல்லினம் மெல்லினம் இடையினம் என்றே.

கசட தபற வல்லின மாகும்
ஙஞண நமன மெல்லின மாகும்
யரல வழள இடையின மாகும்
மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே.

4.6. சார்பின் வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சார்பெழுத் தென்பது வகைகளில் பத்து
உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை
குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் 
என்பன அந்தப் பத்து வகைகளாம்.

முதலெழுத் துகளைச் சார்ந்து வருதலால்
சார்பெழுத் தென்னும் பெயரினைத் தாங்கி
மேலுள்ள பத்து வகைகளில் வருமே.

4.7. உயிர்மெய்

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
இக்-முதல் இன்-வரை ஒவ்வொரு மெய்யும்
அ-முதல் ஔ-வரை உயிருடன் சேர்ந்து
க-முதல் ன-வரை இருநூற்றுப் பதினாறாக
வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆகுமே
சான்றாக
ககா-கிகீ குகூ-கெகே கைகொகோ
கௌ-என்று க-வர்க்க உயிர்மெய் பன்னிரண்டே.

4.8. ஆய்தம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
உயிரிலும் மெய்யிலும் உயிர்மெய் யிலும்சேரா
அஃ-எனச் சொல்லும் ஆய்த எழுத்துக்கு 
முப்புள்ளி முப்பாற் புள்ளி தனிநிலை
என்றே வேறு பெயர்களும் உண்டே.

முன்னொரு குறிலும் பின்னொரு வல்லினம்
பெற்று இடைவரும் ஆய்த எழுத்தே.
சான்றாக அஃது, எஃகு, எனவரும்.
தனக்கே உரிய அரைமாத் திரையில்
குறையா தொலிப்பது முற்றாய்த மாகும்.

*****

4. யாப்பு விவரணம்: அடிப்படை உறுப்புகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4. யாப்பு விவரணம்: அடிப்படை உறுப்புகள்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அசைகள் இசைந்து ஒலித்து ஒருங்கே 
இயல்பாய் அமைவது செய்யுள் என்றும்
ஒசை ஒருங்கே அமைந்து ஒலிக்கத்
தளைகள் முக்கியம் என்றும் 
அறிந்த பின்னர் இனிமேல்
செய்யுளின் அடிப்படை உறுப்புகள் ஆய்வோம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்பே சொன்னதை நினைவில் கொணர
அளவும் பாவும் அடியும் சீரும்
அசையும் எழுத்தும் மாத்திரை யாக
அடிப்படை உறுப்புகள் ஏழெனத் தெரியுமே. ... [பார்க்க 3.,2.1.]

4.1. மாத்திரை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மாத்திரை என்பது கால அளவு.
கண்ணிமை கைநொடி செய்தல் காலம்
மாத்திரை யாகும் ஒன்றென் றறிக.

எழுத்தொலிக் காலமே யாப்பின் மாத்திரை
எழுத்தின் மாத்திரை இப்படி யாகும்:
குறிலொன்று, நெடிலிரண்டு, உயிரளபெடை மூன்றே.

குற்றிய லிகரம், குற்றிய லுகரம்,
ஆய்தம், மெய்யிவை அரைமாத் திரையே;
உயிரின் அளவே உயிர்மெய் அளவு.

ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம் ஒன்று;
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
என்பன கால்மாத் திரையில் ஒலிக்குமே.

4.2. எழுத்து

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுவெனும் வினையடிப் பிறந்த சொல்லாம்
எழுத்து என்பது பெயர்ச்சொல் ஆகும்
எழுதல் என்றால் உருப்பெறத் தோன்றுதல்
எழுதுதல் என்பது தோன்றச் செய்தலே.

எண்ணம் உருப்பெறத் தோன்றும் எழுத்து
உருவின்றிக் ஒலியாய்க் கேட்டதை வரைந்து
உருவுடன் பார்க்க வைப்பது எழுத்து.

எண்ணங்கள் அலையுமனம் எழுத்தில் சீர்ப்பட
வண்ணங்கள் விரிந்து காணுமனம் நிறைக்கும்.
எழுத்து இன்றேல் இலக்கியம் இல்லை.

எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
எழுத்தெனும் சொல்லில் அடங்கி யுள்ளன.
எழுத்தே முதலில் ஓரொலியின் வரிவடிவம்.

எழுதுதலும் எழுதியதும் குறிக்கும் எழுத்து.
தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
கையில் ஓடும் ரேகை எழுத்து.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று
வள்ளுவர் பெருமான் சொல்லும் போது
இலக்கணம் என்று பொருள்படும் எழுத்து.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
என்று ஔவையும் குறள்வழி கூறுவார்.

எழுதும் எழுத்து வரிவடி(வு) என்பதால்
எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
எழுத்தெனும் சொல்லது சித்திரமும் சுட்டுமே.

கண்ணுக்கு மையெழுதும் பெண்ணைக் கவிஞன்
எழுத்தில் எழுதி மனதில் வரைவான்.
ஓவியன் வரிகளோ மனதில் எழுதுமே.

*****