கவிதையில் யாப்பு
ரமணி
4.3. எழுத்தின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்.
எழுத்தெனப் படுவது எழுதப் படுவது
என்று இலக்கண நூல்கள் குறிக்குமே.
எழுத்தெனப் படுவது மூவகைப் படுமே
உயிரும் மெய்யும் சார்பும் என்று.
உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்
முதல்சார்ந்து வந்தது சார்பெழுத் தாகுமே.
முதலில் வருவது மொத்தம் முப்பது
உயிரெழுத் துகளில் பத்தும் இரண்டும்
மெய்யெழுத் துகளில் பத்தும் எட்டுமே.
4.4. உயிரின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்
உயிரில் வகைகள் மூன்று உண்டு
குறிலே நெடிலே அளபெடை என்று.
குறில்கள் ஐந்து: அ,இ,உ, எ,ஒ-என,
நெடில்கள் ஏழு: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.
4.5. மெய்யின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்
மெய்யில் வகைகள் மூன்று உண்டு
வல்லினம் மெல்லினம் இடையினம் என்றே.
கசட தபற வல்லின மாகும்
ஙஞண நமன மெல்லின மாகும்
யரல வழள இடையின மாகும்
மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே.
4.6. சார்பின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சார்பெழுத் தென்பது வகைகளில் பத்து
உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை
குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
என்பன அந்தப் பத்து வகைகளாம்.
முதலெழுத் துகளைச் சார்ந்து வருதலால்
சார்பெழுத் தென்னும் பெயரினைத் தாங்கி
மேலுள்ள பத்து வகைகளில் வருமே.
4.7. உயிர்மெய்
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
இக்-முதல் இன்-வரை ஒவ்வொரு மெய்யும்
அ-முதல் ஔ-வரை உயிருடன் சேர்ந்து
க-முதல் ன-வரை இருநூற்றுப் பதினாறாக
வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆகுமே
சான்றாக
ககா-கிகீ குகூ-கெகே கைகொகோ
கௌ-என்று க-வர்க்க உயிர்மெய் பன்னிரண்டே.
4.8. ஆய்தம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
உயிரிலும் மெய்யிலும் உயிர்மெய் யிலும்சேரா
அஃ-எனச் சொல்லும் ஆய்த எழுத்துக்கு
முப்புள்ளி முப்பாற் புள்ளி தனிநிலை
என்றே வேறு பெயர்களும் உண்டே.
முன்னொரு குறிலும் பின்னொரு வல்லினம்
பெற்று இடைவரும் ஆய்த எழுத்தே.
சான்றாக அஃது, எஃகு, எனவரும்.
தனக்கே உரிய அரைமாத் திரையில்
குறையா தொலிப்பது முற்றாய்த மாகும்.
*****
No comments:
Post a Comment