கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4. யாப்பு விவரணம்: அடிப்படை உறுப்புகள்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
அசைகள் இசைந்து ஒலித்து ஒருங்கே
இயல்பாய் அமைவது செய்யுள் என்றும்
ஒசை ஒருங்கே அமைந்து ஒலிக்கத்
தளைகள் முக்கியம் என்றும்
அறிந்த பின்னர் இனிமேல்
செய்யுளின் அடிப்படை உறுப்புகள் ஆய்வோம்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்பே சொன்னதை நினைவில் கொணர
அளவும் பாவும் அடியும் சீரும்
அசையும் எழுத்தும் மாத்திரை யாக
அடிப்படை உறுப்புகள் ஏழெனத் தெரியுமே. ... [பார்க்க 3.,2.1.]
4.1. மாத்திரை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மாத்திரை என்பது கால அளவு.
கண்ணிமை கைநொடி செய்தல் காலம்
மாத்திரை யாகும் ஒன்றென் றறிக.
எழுத்தொலிக் காலமே யாப்பின் மாத்திரை
எழுத்தின் மாத்திரை இப்படி யாகும்:
குறிலொன்று, நெடிலிரண்டு, உயிரளபெடை மூன்றே.
குற்றிய லிகரம், குற்றிய லுகரம்,
ஆய்தம், மெய்யிவை அரைமாத் திரையே;
உயிரின் அளவே உயிர்மெய் அளவு.
ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம் ஒன்று;
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
என்பன கால்மாத் திரையில் ஒலிக்குமே.
4.2. எழுத்து
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுவெனும் வினையடிப் பிறந்த சொல்லாம்
எழுத்து என்பது பெயர்ச்சொல் ஆகும்
எழுதல் என்றால் உருப்பெறத் தோன்றுதல்
எழுதுதல் என்பது தோன்றச் செய்தலே.
எண்ணம் உருப்பெறத் தோன்றும் எழுத்து
உருவின்றிக் ஒலியாய்க் கேட்டதை வரைந்து
உருவுடன் பார்க்க வைப்பது எழுத்து.
எண்ணங்கள் அலையுமனம் எழுத்தில் சீர்ப்பட
வண்ணங்கள் விரிந்து காணுமனம் நிறைக்கும்.
எழுத்து இன்றேல் இலக்கியம் இல்லை.
எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
எழுத்தெனும் சொல்லில் அடங்கி யுள்ளன.
எழுத்தே முதலில் ஓரொலியின் வரிவடிவம்.
எழுதுதலும் எழுதியதும் குறிக்கும் எழுத்து.
தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
கையில் ஓடும் ரேகை எழுத்து.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று
வள்ளுவர் பெருமான் சொல்லும் போது
இலக்கணம் என்று பொருள்படும் எழுத்து.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
என்று ஔவையும் குறள்வழி கூறுவார்.
எழுதும் எழுத்து வரிவடி(வு) என்பதால்
எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
எழுத்தெனும் சொல்லது சித்திரமும் சுட்டுமே.
கண்ணுக்கு மையெழுதும் பெண்ணைக் கவிஞன்
எழுத்தில் எழுதி மனதில் வரைவான்.
ஓவியன் வரிகளோ மனதில் எழுதுமே.
*****
No comments:
Post a Comment