கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4.9. அளபெடை யென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளபு என்பது மாத்திரை அளவு
அளபு எடுத்தல் மாத்திரை நீளுதல்
அளபு எடுத்துத் தனதுமாத் திரையின்
நீண்டு ஒலிப்பதே அளபெடை யாகும்
அளபெடுத்தல் குறிக்க அளபெடுத்த எழுத்தின்
இனவெழுத் தொன்று தொடர்ந்து வருமே.
செய்யுளில் ஓசை குறையும் போது
உயிர்நெடில் எழுத்துகள் ஏழும்
ஙஞண நமன வயலள பத்தும்
தனியே நிற்கும் ஆய்த எழுத்தும்
தத்தம் மாத்திரை நீண்டு ஒலிப்பதே
அளபெடை என்று அழைக்கப் படுவது
அளபெடை இருவகை: உயிரும் ஒற்றும்.
4.10. உயிரளபெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடில்பின் தக்க குறிலே வந்து
ஒசை நிரப்பும் உயிரள பெடையாம்
மூன்று மாத்திரை யாக ஒலிக்கும்.
உயிரள பெடையில் மூவகை யுண்டு
செய்யுளிசை இன்னிசை சொல்லிசை யென்றே.
அளபெடுக்கும் போதோர் இனவெழுத்து தோன்றுமே:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.
4.11. செய்யுளிசை அளபெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
முதலிடை கடையில் அளபெடுத்து வந்தால்
செய்யுளிசை அளபெடை என்றபெயர் பெறுமே.
’ஆஅதும் என்னுமவர்’ என்று முதலிலும்,
’தெய்வந் தொழாஅள்’ என்று இடையிலும்,
’நல்ல படாஅ’ என்று கடையிலும்
செய்யுளிசை அளபெடுத்து வருவது காண்க.
அதும்-தொழாள்-படா என்னும் சொற்கள் தம்முள்
ஓரசைச் சீராய் நிற்றல் கருதி
ஓசை நிறைக்க அவற்றை நீட்டி
ஈரசைச் சீர்க ளாக்கி எழுதி
அசையும் தளையும் குன்றா திருக்கச்
செய்த முயற்சியே செய்யுளிசை யளபெடை.
சான்றுகள்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
--திருக்குறள் 653
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
--திருக்குறள் 1115
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
--திருக்குறள் 55
4.12. இன்னிசை அளபெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
இன்னிசை அளபெடை என்றபெயர் பெறுமே.
’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’
என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.
’கெடுப்பதூம், உடுப்பதூம், உண்பதூம்’ சொற்கள்
’கெடுப்பதும் உடுப்பதும் உண்பதும்’ என்றே
ஈரசைச் சீரின் இலக்கணம் அமைந்தும்
இன்னிசை நோக்கி அளபெடுத்தல் காண்க.
சான்றுகள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
--திருக்குறள் 15
உடுப்பதூஉம் உணபதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்.
--திருக்குறள் 1079
4.13. சொல்லிசை அளபெடை
(நேரிசை ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
ஒருசொல் மற்றொன் றாக வேறுபடுத்தி,
சொல்லிசை கூட்ட வருவது
சொல்லிசை அளபெடை என்றபெயர் பெறுமே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லிசை அளபெடை வந்திடும் போது
பெயர்ச்சொல் லொன்று வினையெச் சமாகும்.
’நசைஇ தொகைஇ வளைஇ அளைஇ’
’விரும்பி தொகுத்து வளைத்து அளந்து’
என்பன சொல்லிசை அளபெடைச் சான்றுகள்.
(இணைக்குறள் ஆசிரியப்பா)
"உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்"
என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
அளபெடுத்து நசைஇ, விரும்பி என்று
ஆனது சொல்லிசை அளபெடைச் சான்று.
சான்றுகள்
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்.
--திருக்குறள் 1263
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
--தொல்காப்பியம், பொருள்.அகத். 39
நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
--நப்பூதனார், முல்லைப்பாட்டு 1-2
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
--திருக்குறள் 91
4.14. ஒற்றள பெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுளில் ஓசை குறையு மிடத்து
மெய்யெழுத்து மிகுந்து ஒலித்து பாட்டில்
ஒசை நிரப்புவது ஒற்றள பெடையாம்.
செய்யுள் ஓசை குறையு மாயின்
ஈடு செய்ய இடைகடை அளபெடுத்து
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுத் ததுகாட்ட மீண்டும் எழுதப்படும்.
குறிலின் குறிலிணைக் கீழ்வரும் ஒற்று
இடைகடை அளபெடுத்து மிக்கு வரும்.
’எஃஃகு இலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள்.
’எஃஃகு, இலங்கிய’ தனிக்குறிற் கீழிடை
’கண்ண் கருவினை’ தனிக்குறிற் கீழ்கடை
’கலங்ங்கு நெஞ்சமிலை’ குறிலிணைக் கீழிடை
’மடங்ங் கலந்த’ குறிலிணைக் கீழ்க்கடை
ஒற்றள பெடையாய் வருவது காண்க.
சான்றுகள் அனைத்திலும் ஒற்றள பெடுத்ததால்
ஓரசைச் சீர்கள் ஈரசை யாகிச்
செய்யு ளொசை நிறைத்தல் காண்க.
சான்றுகள்
எஃஃகிலங்கிய கையராயின்னுயிர்
வெஃஃகுவார்க் கில்லைவீடு.
பூஉந் தண்ண் புனமயில் அகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பப்
--சிதம்பரச் செய்யுட் கோவை 12
அளபெடைச் சீர்களை அலகிடும் போது
தளைகள் தட்டில் அலகு பெறுமே
தளைகள் ஒன்றின் அலகு பெறாது.
அளபெடை மாத்திரை நோக்கும் போது
உயிரளபெடை ஒலிப்பது மூன்றுமாத் திரையில்
ஒற்றளபெடை ஒலிப்பது ஒருமாத் திரையிலே.
*****
No comments:
Post a Comment