Friday, February 15, 2013

4.42. சீர் வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.42. சீர் வகைகள்

(கலிவிருத்தம்)
நேரசையும் நிரையசையும் பல்வகையில் இணந்து
ஓரசைமுதல் நான்கசைவரை உருவாகும் சீர்களில்
ஈரசையும் மூவசையும் அதிகம் பயின்றும்
நான்கசைச் சீர்கள் அருகியும் வருமே.

(குறள் வெண்செந்துறை)
சீர்களின் வகைகளை நினைவினில் வைக்கச்
சீர்களின் வாய்பா டுகள்மிக உதவுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீர்வகைப் பெயர்தன் அசைத்தொகை பொறுத்து
ஓரசை ஈரசை மூவசை நாலசை
என்றே நால்வகைப் பெயர்பெறு மாயினும்
செய்யுட் குரிமை பூண்டு நிற்கும்
திறமும் பிறவும் நோக்கி யவற்றை
அசைச்சீர் அகவற்சீர் வெண்சீர் வஞ்சிச்சீர்
பொதுச்சீர் என்ற ஐவகைப் பெயர்களில்
அழைப்பது செய்யுள் வழக்கினில் அமையுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீ ரென்பது ஓரசைச் சீரே
அகவற் சீர்கள் ஈரசை வகைகளே
வெண்சீ ரென்பது மூவசைக் காய்ச்சீர்
வஞ்சிச் சீர்வகை மூவசைக் கனிச்சீர்
பொதுச்சீ ரென்பது நாலசைச் சீர்களே.

4.43. ஓரசைச் சீர்

(ஆசிரியத் தாழிசை)
அசையொன்று தனிநின்று இசைநிறைக்க வருவதே
அசைச்சீர் என்னும் ஓரசைச் சீராம்.
அசைச்சீர் இரண்டே தனிநேர் தனிநிரை.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீர் பெரிதும் வெண்பா ஈற்றிலும்
கலிப்பா அம்போ தரங்க ஈற்றிலும்
வஞ்சி விருத்தம் இடையிலும் வருமே.

(குறள் வெண்செந்துறை)
நாள் மலர் காசு பிறப்பு
என்பது ஓரசைச் சீர்வாய் பாடு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர் நிரை நேர்பு நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்கள்.
இறுதிச் சீரென வெண்பாவின் ஈற்றடியில் 
இவற்றில் ஓன்று மட்டும் வருமே.

காசு பிறப்பு ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு
நிரையுடன் சேர்ந்தா லாகும் நிரைபு.

தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லாத நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது நேர்பு
நிரையுடன் குற்றுகரம் சேர்வது நிரைபு.

மது-எனும் அசைச்சீர் நேர்பா மலரா?
து-எனும் எழுத்து குற்றுகர மாயினும்
ம-வெனும் எழுத்து தனிக்குறி லாகிட
மதுவெனும் அசைச்சீர் தனிநிரை யாகி
மலரெனக் குறிக்கும் வாயா டாகுமே.

மாசு என்பதில் குற்றிய லுகரம்
மாவெனும் தனிநெடி லுடனே சேர்வதால்
காசெனும் வாய்பா டினிலே வருமே.

பந்து என்பதன் வாய்பா டென்ன?
பந்து என்பதில் பந்-எனும் நேரசை
குறிலொற்றுப் பெற்றதால் தனிக்குறி லன்று
குற்றுகரம் சேரக் காசு ஆகுமே.

உவர்-எனும் தனிநிரை அசைச்சீர் மலரே
உவர்ப்பு என்று வந்தால் அதுவே
உவர்-உடன் சேரும் குற்றுக ரத்தால்
பிறப்பெனும் வாய்பா டாகி வருமே.

(சிந்தியல் வெண்பா)
நாள்-இல் முடிவது இந்தக் குறட்பா:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்-இல் முடிவது இந்தக் குறள்வெண்பா:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

காசு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறப்பு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

4.43. ஓரசைச் சீர் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

No comments:

Post a Comment