கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4.33. அசை வகைகள்
[மேல் விவரங்கள்: 3.1. அசையும் சீரும்]
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்றே சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே.
அசையில் இரண்டு வகைகள் உண்டு:
நேரசை நிரையசை என்பன அவையே.
நேரே வருவதால் நேரனப் பட்டது:
ஒன்றே எழுத்தால் ஆவதால் நேரசை.
ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்:
எழுத்துகள் இரண்டு தொடர்ந்தே வந்து
இணைந்து அசைவதால் நிரையசை யாகுமே.
குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ
ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும்
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும் ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.
4.34. நேரசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரசை வந்திடும் வகைகள் நான்கு
ஒருகுறில் தனித்து வருவது நேரசை
ஒருகுறில் ஓற்றடுத்து வருவதும் நேரசை ... ... [ஒற்றடுத்து வருவது = அடுத்து வருவது ஒற்றெழுத்து]
ஒருநெடில் தனித்து வருவது நேரசை
ஒருநெடில் ஓற்றடுத்து வருவதும் நேரசை.
’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின்
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்நேர்’ ஆகுமே.
4.35. நிரையசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நிரையசை வந்திடும் வகைகள் நான்கு
குறில்கள் இரண்டு வருவது நிரையசை
குறிலிணை ஓற்றடுத்து வருவது நிரையசை
குறில்நெடில் இணைந்து வருவது நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத்து வருவது நிரையசை.
’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுத்தது.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
ஒற்றில்லா நேரசையில் ஓரெழுத் திருக்குமே
ஒற்றில்லை யென்றால் முதல்வரும் நெடிலே.
’உமா’ என்பது குறில்நெடில் நிரையசை
’மாவு’ நெடில்குறில் தனித்த நேரசை
ஒற்றில்லா நிரையசையில் இரண்டெழுத் திருக்குமே
அவற்றுள் முதலது என்றும் குறிலே.
’உமா’வெனும் நிரையில் முதலது குறிலே.
4.36. அசையும் சொல்லும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசைதனில் வருவது உண்டு
சொல்லொன்று வரலாம் நேரசை ஒன்றில்
சொல்லொன்றோ இரண்டோ வரலாம் நிரையசையில்.
தனிக்குறில் நேரசை இறுதியில் வருவதால்
தனியே பொருளது தராது நிற்குமே
ஒற்றுடன் சேர்ந்தால் பொருள்தர வருமே
’பல்லி’ எனும்சொல் நேர்நேர் ஆவதில்
’பல்’லெனும் நேரசை ஒற்றால் பொருள்பெறும்
’லி’யெனும் நேரசைப் பொருளேது மில்லை.
தனிநெடில் நிரையசை பொருள்தர வரலாம்
தனிநெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’தா-பால்’ என்னும் சொற்களில் சான்றுள.
குறில்நெடில் நிரையசை பொருள்தர வரலாம்
குறில்நெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’உமா-இறால்’ என்னும் சொற்களில் சான்றுள.
நேரசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவது பொதுவில் காண்பது
’என்/ன கே/ளாய்’ எனும்தொடர் சான்றாம்.
நிரையசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவதும் பொதுவில் காண்பதே
’வரு/வினை அறுப்/பதால்’ எனும்தொடர் சான்றாம்.
*****
No comments:
Post a Comment