கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
1. கடவுள் வாழ்த்து
கணபதி
(கலிவிருத்தம்)
வெண்துகில் உடுத்து வெளியெங்கும் வியாபித்து
வெண்ணிலா நிறத்துடன் ஆனந்த முகம்கொண்ட
ஓங்கார வடிவத்தை விக்னமறத் தியானித்துப்
பாங்காக நூலமையப் பாதம் பணிவேனே.
அவையடக்கம்
(வெண்டுறை)
கற்றறிந்தோர் நூற்பல சற்றேனும் கற்றதில்
பெற்றசில செய்தி மகிழ்ச்சி வியப்பினை
மற்றவரும் கண்டு மகிழ்ந்து பயன்பெற
உற்றதே ’கவிதையில் யாப்பு’.
1.1. செய்யுளும் கவிதையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பு என்பது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பே.
எழுத்தும் அசையும் சீரும் தளையும்
தொடுத்து அடிகளில் சேரக் கட்டிப்
பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம்.
செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் பிரதி பதங்களே.
கவிதை என்பது கவினுற விதைத்தல்.
பாட்டு என்பது பாடப் படுவது.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே.
மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம்.
மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் அதன்நார் என்றால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம்.
யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாகும் நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் அதன்பொருள் மனமே.
கவிதையில் மனதைச் சொல்லும் போது
செய்யுள் யாக்கையைக் கவினுறச் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
நாரின் ஓசையை, முழுவதும் துய்ப்போம்.
*** *** ***
No comments:
Post a Comment