Tuesday, January 22, 2013

3.4. அகவல் முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.4. அகவல் முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அகவல் ஒலிவரப் புனைவது எளிது.
நாமும் அகவல் புனைந்திடு வோமா?
அகவல் ஓசையின் தேவைகள் என்ன?

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
சீர்கள் ஈரசை பெற்று வந்தால்
சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
அகவற் றளைகள் மட்டும் வரவே. 
[அகவற் றளைகள்: நேரொன்று, நிரையொன்று ஆசிரியத் தளைகள்]

இங்ஙனம் புனைதல் இயலா தென்பதால்
நேர்முன் நிரையும் நிரைமுன் நேர்வரும்
ஈரசை இயற்சீர் வெண்டளை விரவி
அகவல் ஓசை சற்றே மங்கினும்
அகவற் பாவில் ஒலிக்கப் புனைவரே.
[மூவசைச் சீர்கள் இப்போது வேண்டாம்.]

அகவல் வெண்டளை விரவும் அடிகள்:
வாசலில் யாரெனப் பாரடி மகளே!
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
வா/சலில் யா/ரெனப் பா/ரடி மக/ளே!
வே/றுயார், உங்/கள் அறு/வை நண்/பரே!

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நிரை நேர்-நிரை நேர்-நிரை நிரை-நேர்
நேர்-நிரை நேர்-நேர் நிரை-நேர் நேர்-நிரை

தந்தையும் மகளும் அழைத்துக் கூவிட
அசைகள் யாவும் இசைந்து வந்திட
அகவல் ஓசை வருவது தப்புமோ?

தந்தையின் கூவல் கூர்த்த தொடர்ச்சி.
வாசலில் யாரெனப் பாரடி மகளே!
மகளின் கூவல் நின்று ஒலிப்பது,
அயர்ச்சி, அங்கதம், குரலில் தெரிய.
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

இந்த அடிகளை இப்படி எழுதினால்
வேறு ஓசைகள் விரவிடக் கேட்பீர்:
வாசலில் யாரென்று பார்த்திடுவாய் மகளே!
வேறுயார், உங்களது அறுத்திடும் நண்பரே!

அகவல் குறைந்து வினவல் ஆகிட
செப்பலும் துள்ளலும் சேர்ந்தே ஒலிக்க
அகவல் ஓசை மறைவது காண்பீர்.

முழுவதும் நேரசை வருகிற அகவல்:
பாலும் தேனும் இல்லை யென்றால்
நீரும் சோறும் போதும் அன்றோ?

முழுவதும் நிரையசை வருகிற அகவல்:
பலவகைப் பொருட்களில் மயங்கிடும் உலகினில்
நிலைபெற இருப்பது எதுவெனத் தெரியுமா?

கவிதையைச் செய்யுளாய்க் கிளைத்திடும் போது
கவினும் அழகும் அணியும் நோக்கி
மனதில் வருவதை வந்தபடி கொட்டாமல்
வனப்பு மிளிர எழுத முனைந்தால்
கவிதையின் விதைகள் படிப்போர் மனதில்
மெல்லத் துளிர்விட்டு நின்று நிலைக்கும்
மத்தாப் பாக எரிந்து மறையாது!

எனவே கவிதை முனையும் அன்பர்காள்!
செய்யுள் நன்கு புனையக் கற்பீர்.
தறியின் பாவு ஊடுதல் போலப்
பாவி நடப்பதே பாட்டென் றுணர்க.

ஓசை உணர்ந்து அசைகளைப் பிணைத்தால்
தளைகள் தாமே பொருந்தி வந்து
எழுதும் பாவகை எவ்வகை ஆயினும்
எழுதும் பாட்டு சிறப்பது நிச்சயம்.

No comments:

Post a Comment