கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3. யாப்பு விவரணம்: ஓசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிப்படை உறுப்புகள் முதலில் ஆய்வோம்.
செயல்வகை உறுப்புகள் பின்னர் பார்ப்போம்.
பொருள்வகை உறுப்புகள் இறுதியில் வருமே.
அடிப்படை உறுப்புகள் ஏழில் வருமே:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யாகவே. ... [பார்க்க 2.1.,2.6.]
செயல்வகை உறுப்புகள் ஏழில் வருமே:
யாப்பும், தூக்கும், தொடையும், மாட்டும்,
வண்ணம், இயைபு, இழைபு என்றே. ... [பார்க்க 2.6.]
பொருள்வகை உறுப்புகள் பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்றே. ... [பார்க்க 2.3.,2.5.]
ஓசை:
மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்;
எனவே முதலில் ஓசையை ஆய்வோம்.
தளைகள் பயின்றிட வருவது ஓசை.
தளையால் ஓசையும் ஓசையில் தளையும்
என்றிவ் விரண்டும் ஸயாமின் இரட்டையரே.
இயல்பான ஓசையில் வருவது இயற்பா
இசையோடு சேர்ந்து ஒலிப்பது இசைப்பா
இயற்பா இயல்வது இலக்கண விதிகளில்
இசைப்பா இயல்வது சந்த லயங்களில்
இலக்கண விதிகளில் இயலும் இயற்பாவின்
இயல்பான ஓசையைத் தளைகள் குறிப்பினும்
இயற்பா ஓசையில் எழுத்தும் சீரும்
இணைந்தே செய்யுளின் ஓசை எழுமே.
3.1. அசையும் சீரும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை விவரணம் நோக்கும் முன்னர்
அசைச்சீர் உறுப்புகள் அடிப்படை தெளிவோம்.
ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்து
ஒன்றாய் ஒலிப்பது அசையெனப் படுமே.
அசைகள் ஒன்றோ பலவோ சேர்ந்து
இசைந்து ஒலிப்பது சீரெனப் படுமே.
(குறள் வெண்செந்துறை)
குறிலோ நெடிலோ தனித்துவந் தாலோ,
ஒற்றடுத்து வந்தாலோ, நேரசை எனப்படும்.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
[பா/னு வந்/தாள்]
தனிக்குறில் அசைகள் பெரிதும் சீரின்
இறுதியில் வருமே: ’பானு, படகு’.
ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்நேர்’ ஆகும்.
குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும், ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
[வழி/வகை அறிந்/திடாள்]
(இணைக்குறள் ஆசிரியப்பா)
சீர்களின் அசைகளைப் பிரிக்கும் போது
குறில்கள் தொடர்ந்து வந்தால்,
இருகுறில் இணைப்பினை
நிரையெனச் சேர்த்த பின்னரே,
ஏதும் தனிக்குறில் மீதம் இருப்பின்
நேரசை யதுவெனப் பிரிக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் தனிக்குறில்
சீரின் இறுதியில் வருவது காணலாம்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இதனால் ’மகளே’ என்பது ’மக/ளே’
என்றுதான் ஆகும்; ’ம/களே’ ஆகாது.
’வருவதறி’ என்பது ’வரு/வத/றி’ ஆகும்.
’வருவதறிகுறி’ என்பது ’வரு/வத/ரிகு/றி’ ஆகுமே.
அசைகள் இணைந்து வருகிற சீர்களில்
ஈரசை மூவசைச் சீர்களே செய்யுளில்
பெரிதும் பயின்று வருமென அறியலாம்.
ஈரசைச்சீர் இருவகை: மாச்சீர் விளச்சீர்.
நேரசை இறுதியில் வருவது மாச்சீர்
நிரையசை இறுதியில் வருவது விளச்சீர்.
மூவசைச்சீர் இருவகை: காய்ச்சீர் கனிச்சீர்.
நேரசை இறுதியில் வருவது காய்ச்சீர்.
நிரையசை இறுதியில் வருவது கனிச்சீர்.
அசைச்சீர் வகைகளின் வாய்பா டுகளும்
செய்யுளை அலகிடும் முறைகள் பற்றியும்
உரிய பகுதியில் அறியப் பெறலாம்.
No comments:
Post a Comment