கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
3.6. செப்பல் முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?
மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
காய்முன் நேரும் சீரிடை அடியிடை
வந்தால் செப்பல் தானே பயிலுமே.
காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.
தானே இயல்பாய் மொழிதல் மற்றும்
வாக்கியம் போல அமைவது செப்பல்.
செப்பல் ஓசை பயிலும் வெண்பா
ஒன்று நான்கு அடிகளில் முயல்வோம்
வெண்பா விளக்கம் வேறோர் இயலிலே.
(வெண்பா)
கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடக்க
மாடியில் போட்ட வடாம்.
இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
மண்/ணோ/டு காற்/றடித்/தால் உள்/ளம் பத/றுமே!
பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க
மா/டியில் போட்/ட வடாம்.
சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்
நேர்நிரை நேரநேர் மலர்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்து
நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? ... [நடக்க--மாடியில்]
இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.
(வெண்பா)
கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட ... [’நடக்க’ என்பதை மாற்றி]
மாடியில் போட்ட வடாம்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை மோனை முயற்சிகள் இன்றி
இன்றைய பேச்சு வழக்கில் பயிலும்
சொற்களை வைத்து இன்னொரு வெண்பா.
இந்த அடிகளை அலகிட்டுப் பார்த்து
செப்பல் ஓசை சீரிடை அடியிடை
வருவது கண்டு உறுதி செய்யவும்.
(வெண்பா)
நேரம் தவறாமல் வேளைக்குச் சாப்பாடு
நாயர் கடைடீ நினைத்தபோது சூடாக
வாரம் ஒருமுறை மாட்டினி மூவிகள்
பேச்சிலர் வாழ்க்கையே வாழ்வு!
No comments:
Post a Comment