கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.8. துள்ளல் முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் துள்ளல் புனைந்திடு வோமா?
துள்ளல் ஓசையின் தேவைகள் என்ன?
கலித்தளை பெரிதும் வருவது வேண்டும்.
(கலிவிருத்தம்)
காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளையாய்க் குதித்துவரும்
கலிப்பாவில் கலித்தளையே பெரும்பாலும் பயின்றுவரும்
கலித்தளையே சீர்களிடை பெரிதும்வர வேண்டுவது
கலித்தளையே அடியிடையே கட்டாய மில்லை.
முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)
வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்(து)
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.
(ஆசிரியத் தாழிசை)
இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
வீட்/டுக்/குள் பறந்/தோ/டும் குழந்/தை/யைப் பிடித்/திழுத்(து)
இடுப்/பினி/லே இருத்/திவைத்/து நிலா/காட்/டி உண/வூட்/டினாள்.
சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரை
நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநேர்நிரை
(குறள் வெண்செந்துறை)
மூவசைச் சீர்கள் நேரசையில் முடிந்து
நிரைதொடரக் கலித்தளை வருவது காண்க.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பிடித்திழுத்(து) இடுப்பினிலே என்ற சீர்கள்
பிடித்திழுத் திடுப்பினிலே என்றாகிப் புணர்ச்சியில்
கருவிளம் கருவிளங்காய்ச் சீர்களாகி விளம்முன்
நிரைவர நிரையொன் ராசிரியத் தளையாகு(ம்)
எனினும் பெரிதும் கலித்தளை பயின்று
வருவதால் அடிகளில் துள்லலே கேட்கும்
குழந்தையின் துள்ளலும் தாய்தடு மாற்றமும்
பொருளிலும் ஒலியிலும் இயல்வது நோக்குக.
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
துள்ளலோசை தொடர்ந்துவர நிரையசையில் தொடங்குகிற
புளிமாங்காய் கருவிளங்காய் எனும்காய்ச்சீர் களையடுக்கி
நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர்
அடிதோறும் அமைத்திட்டால் எழுதும்பா முழுவதுமே
ஒலித்துள்ளல் வருமெனினும் இதுபோல எழுதுவது
கடினமென்றும் ஒருநிலையில் செயற்கையாகு(ம்) எனக்காண்க
எனவேதான் கலித்தளையும் பிறதளையும் விரவிவரக்
கலிப்பாக்கள் பொதுவாக இயற்றப்படல் காணலாம்.
முயற்சி 2.
[அலகிட்டுக் கலித்தளையே பயில்வது காண்க.]
(குறள் வெண்செந்துறை)
படபடக்கும் சிறகுடனே பறந்துவரும் புறாக்கூட்டம்
சடசடெனத் தரையமர்ந்து பொரியுண்ணும் அழகுகாண்பீர்!
*****
No comments:
Post a Comment