Monday, January 28, 2013

3.7. துள்ளல் ஓசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.7. துள்ளல் ஓசை

(இணைக்குறள் ஆசிரியப்பா)
துள்ளல் என்பது குதித்தல் ஆகும்
துள்ளலில் நடையே தடைப்படும்
பசுவின் கன்று துள்ளல் போல
இடையிடை உயர்ந்து மீண்டும் சமன்படுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
துள்ளலை விளக்கும் கீழ்வரும் மூன்று 
அடிகளில் சீரிடை மட்டும் கலித்தளை
பயின்றிடத் துள்ளல் வருவது காண்க.

(ஆசிரியத் தாழிசை)
ஓரடிக்குள் அறுதியிட்டோ அடியிடையே தொடர்ந்துவந்தோ
காய்ச்சீர்முன் நிரைவந்த கலித்தளையால் கலிப்பாவில் 
துள்ளலோசை பயின்றுவந்து பசுக்கன்றை நினைவூட்டும்.

சான்று 1:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய 
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள் 
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத் 
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து 
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

’வகைக்கருணைக் கண்ணோக்கம்’ இருசீர்கள் தவிர்த்தெல்லாச்
சீர்களிடை அடிகளிடைக் கலித்தளையே பயின்றுவர
அடிகளிலே ஒலித்துள்ளல் அமையாது போமோகாண்!

சான்று 2
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவனை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்.
--சேக்கிழார், திருத்தொண்டர் புராணம் 140

வெண்டளையும் கலித்தளையும் சமமாகப் பயின்றாலும்
அணிமேலே அணிசேர்ந்தே அதிசயங்கள் அடுக்கிவரத்
துள்ளலோசை துவளாமல் ததும்புவது கண்டீரோ?

No comments:

Post a Comment