கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.9. தூங்கல் ஓசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நித்திரை மயக்கம் பயின்று வருமாம்
வஞ்சித் தளையில் தூங்கல் ஓசையில்.
தூங்கல் ஓசையில் பாட்டின் விஷயம்
தூங்குவது பற்றி என்பது அல்ல.
அகவலு மின்றிச் செப்பலு மின்றித்
துள்ளலு மின்றி ஒலிகளில் மயக்கம்
மந்தம் ஓய்வு ஏக்கம் வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!
தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.
தூங்கலை விளக்கும் வஞ்சி யடிகள்:
(கலித்தாழிசை)
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சி யடிகள் பொதுவில் அமைவது
இருசீர் அல்லது முச்சீர் அடிகளாய்
தூங்க லோசை கேட்குமோர் பாடல்:
சான்று:
(குறளடி வஞ்சிப்பா)
மாகத்தினர் மாண்புவியினர்
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நயஆகமப்
பேரறிவினர் பெருநூலினர்
காணத்தகு பல்கணத்தினர்
---கி.வா.ஜ.,’கவி பாடலாம்’ பக்.201
(இணைக்குறள் ஆசிரியப்பா)
மரபு சார்ந்த உரைகளில் கூறுவர்:
அகவல் செப்பல் இரண்டும் வருமே
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்
எனினும் துள்ளல் தூங்கல் இரண்டும்
செய்யுளில் மட்டுமே வருவன.
அகவல் செப்பல் அடியிடைத் தளைக்கும்
துள்ளல் தூங்கல் அடிகளில் மட்டுமே.
*****
No comments:
Post a Comment