Tuesday, January 22, 2013

2. செய்யுள் உறுப்புகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

2. செய்யுள் உறுப்புகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
துல்லிய மாக முப்பத்து நான்கில்
நல்லதோர் கவிதை மரபில் முனைவோர்
எல்லோரும் நாடும் அடிப்படை உறுப்புகள்
வல்லிதின் விரிப்போம் இந்நூல் தனிலே.

மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம்,  பயனும், மெய்ப்பாடு, 
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்து, இயைபு,
புலனும், இழைபும் என்னும் இவையே
தொல்காப் பியம்தரும் முப்பத்து நான்கே.

2.1. செய்யுள் இயற்ற

(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுள் என்ப(து) யாதெனக் கேட்பின்
மெய்யில் தங்கும் உயிருடன் ஒப்பிட்டுச்
செய்யுள் இலக்கணம் நன்னூல் கூறுமே.

பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்.
--நன்னூல் 268

தோலும் இரத்தமும் தசையும் சதையும்
எலும்பும் மச்சையும் வீரியம் என்னும்
எழுவகைத் தாதுவால் இயன்றிடும் உடல்போல்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
என்னும் நால்வகைச் சொற்களில் அமைந்து
அகம்புறம் பொருளினை அணிபெற விளக்கிக்
கல்வியில் வல்லோர் உணர்வினை உரைத்தலே
செய்யுள் என்னும் இலக்கிய வடிவமாம்.

எழுத்தால் ஆவது சொல்லென் பதனால்
எழுத்தும் சொல்லும் பொருளும் அணியும்
பழுதற நான்கும் நடப்பது யாப்பே.

செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யெனவே.

பாவே செய்யுள் என்பது ஆகும்;
அந்தப் பாவும் அளவுடன் வருவது;
பாவின் அளவு அடிகள் கணக்கு;
அடியின் அளவு சீர்கள் கணக்கு;
சீரின் அளவு அசைகள் கணக்கு;
அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாகுமே.

இந்த ஏழு உறுப்புகள் யாவும்
வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
செய்யுளில் ஏழும் கட்டுண் டுவரும்.
வழக்கு என்பது பேச்சு வழக்கு,
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுளே.

No comments:

Post a Comment