கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.2. செய்யுள் ஓசை
(நிலமண்டில ஆசிரியப்பா)
ஓசை என்பது ஒலிகளின் இணைப்பு
இயலிசை நாடகம் மூன்றிலும் ஓசை
ஒலியின் ஊடக மாக வருவதே.
இயலெனும் உரைநடை வழக்கில் ஓசை
அலைகளின் இரைச்சலாய்க் குழம்பி வருவது
நாடக வழக்கிலும் உரைநடை போன்றே.
செய்யுள் வழக்கில் ஓசை இசைந்து
இயல்பாய்ப் பயின்று ஒருங்கே வருமே
அகவல், செப்பல், துள்ளல், தூங்கலென
தமிழில் செய்யுள் ஓசைகள் நான்கு.
ஆசிரியத் தளையிரண்டால் ஆவது அகவல்
வெண்டளை யிரண்டு வருவது செப்பல்
கலித்தளை யொன்றே வருவது துள்ளல்
வஞ்சித் தளையிரண்டு வருவது தூங்கல்
ஒவ்வோர் ஓசைக்கும் தளைகள் இருப்பினும்
செப்பல் தவிர வேறு ஒலிகளில்
பிறவகைத் தளைகள் விரவி வருமே.
அகவல் ஓசை வருவது அகவற்பா
அகவற் பாவே ஆசிரி யப்பா
செப்பல் ஓசை வருவது வெண்பா
துள்ளல் ஓசை வருவது கலிப்பா
தூங்கள் ஓசை வருவது வஞ்சிப்பா
நால்வகை ஓசையில் உள்வகை உண்டே.
3.3. அகவல் ஓசை
(நிலமண்டில ஆசிரியப்பா)
மயில்கத் துவதை அகவல் என்கிறோம்
அகவிக் கூறலால் அகவல் எனப்படும்
உயர்த்துக் கூறும் ஓசை அகவல்.
எடுத்தல் என்றும் அதனை அழைப்பரே.
செய்யுளின் அகவல் எடுத்தல் ஓசை
தடைகள் இல்லாது செல்லும் ஓட்டம்
நினைத்தது உரைத்தலாம் நினைத்த வாறே.
ஒருவரே உரைக்க மற்றவர் கேட்பார்
இருவர் உரையா டலாக இன்றி.
ஒருவரே சொல்வது அழைத்தல் எனப்படும்
அழைத்தலில் அகவல் ஓசை கேட்கும்!
தச்சு வேலை செய்வோர் பேச்சில்
போர்க்களம் பற்றிப் பாடுவோர் பாட்டில்
வருவது உரைப்போர் கூறும் சொற்களில்
தனக்குத் தானே பேசும் பேச்சில்
அகவல் ஓசை கேட்பது அறியலாம்.
அகவல் ஓசை பயின்று வருவது
ஆசிரியப் பாவெனும் அகவற் பாவில்.
ஆசிரியப் பாவில் ஆசிரி யத்தளை
வெண்டளை விரவிட அகவல் கேட்கும்.
மாமுன் நேரசை, நிரையசை விளம்முன்
என்று வந்தால் ஆசிரி யத்தளை.
’மாமுன்நேர்’ என்றால் மாச்சீரைத் தொடர்ந்துவரும்
சீரின் முதலசையில் நேரசை இருக்கும்.
’முன்’னென்றால் எதிர்நோக்கி என்றுபொருள் கொள்க.
(குறள் வெண்பா)
மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.
(நிலமண்டில ஆசிரியப்பா)
இவ்விரு தளைகளும் சீர்களின் இடையிலும்
அடிகளின் இடையிலும் தொடர்ந்து வருவது
செய்யுளின் ஓசைக்கு இன்றியமை யாததாம்.
அகவல் ஓசை பயிலுமோர் செய்யுள்:
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
--அகநானூறு 149, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.
இன்னொரு உதாரணம் பாரதி தருவது:
வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
--மஹாகவி பாரதியார்
No comments:
Post a Comment